நீங்கள் மனிதர் அல்ல, கடவுள் என இயக்குநர் விஜய்யை நடிகை கங்கனா பாராட்டியுள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சுயசரிதைத் திரைப்படத்தில் அவருடைய கதாபாத்திரத்தில் பாலிவுட் நாயகி கங்கனா ரணாவத் நடித்துள்ளார். ஜெயலலிதா, கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி காலமானார். அவரது வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் வகையில் தமிழ், ஹிந்தி மொழிகளில் இத்திரைப்படம் தயாராகி வருகிறது.
விஜய் இயக்கி வரும் இப்படத்துக்கான கதையை பாகுபலி, மணிகர்னிகா திரைப்படங்களின் கதாசிரியரும் இயக்குநர் ராஜமெளலியின் தந்தையுமான கே.வி.விஜயேந்திர பிரசாத் எழுதியுள்ளார். விஷ்ணுவர்தன் இந்தூரி, சைலேஷ் ஆர்.சிங் ஆகியோர் தயாரிக்கின்றனர். இசை - ஜி.வி. பிரகாஷ்.
இந்நிலையில் இயக்குநர் விஜய் பற்றி ட்விட்டரில் கங்கனா கூறியதாவது:
அன்பான விஜய் சார், தலைவி பட டப்பிங்கின் முதல் பகுதி முடிவடைந்தது. உங்களுடனான பயணம் விரைவில் முடியவுள்ளது. நீங்கள் காபி, டீ, ஒயின், அசைவ, பார்ட்டிகளுக்கு மறுப்பு சொல்கிறீர்கள். நீங்கள் அபாரமானவர் மட்டுமல்ல, நான் நன்றாக நடிக்கும்போது உங்களுடைய கண்கள் பிரகாசமாகின்றன. பல ஏற்றத் தாழ்வுகளிலும் உங்களிடம் கோபம், பாதுகாப்பின்மை, நம்பிக்கை இழப்பது போன்றவற்றை நான் பார்த்ததில்லை. பல வருடங்களாக உங்களை அறிந்தவர்களிடம் பேசினேன். உங்களைப் பற்றிப் பேசும்போது அவர்களுடைய கண்கள் பிரகாசமாகின்றன. நீங்கள் மனிதர் அல்ல, கடவுள். என் மனத்தின் அடியாழத்திலிருந்து உங்களுக்கு நன்றி கூறுகிறேன் என்றார்.
தலைவி படம் ஏப்ரல் 23 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.