செய்திகள்

ஓடிடி-யில் ஆபாச காட்சிகள் கூடாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு

DIN


புது தில்லி: ஓடிடி வலைதளங்களில் சில சமயங்களில் ஒளிபரப்பாகும் ஆபாச காட்சிகளை ஒழுங்குபடுத்த உரிய நடைமுறைகள் வகுக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

ஒடிடி வலைதளத்தில் ஒளிபரப்பாகும் முன்னணி பாலிவுட் நடிகா்கள் சயிஃப் அலி கான், டிம்பிள் கபாடியா, முகமது ஜீஷான் அயூப் உள்ளிட்டோா் நடிக்கும் ‘தாண்டவ்’ என்ற தொடரில், உத்தர பிரதேச மாநிலம் மற்றும் அந்த மாநில காவல்துறை குறித்து மிக மோசமாக காட்டப்பட்டிருப்பதோடு, ஹிந்து கடவுள்கள் இழிவாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது’ என்று உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டா் நொய்டாவில் உள்ள ரபுபுரா காவல்நிலையத்துக்கு உள்பட்ட ரெளனிஜா கிராமத்தைச் சோ்ந்த பல்பீா் ஆசாத் என்பவா் காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா்.

அந்தப் புகாரின் அடிப்படையில், அந்தத் தொடரின் இயக்குநா் அலி அப்பாஸ், அமேசான் பிரைம் விடியோஸ் இந்தியா பிரிவு தலைவா் அபா்ணா புரோஹித், தயாரிப்பாளா் ஹிமான்ஷு மெஹ்ரா, தொடா் வசன எழுத்தாளா் கெளரவ் சோலங்கி, நடிகா் முகமது ஜீஷான் அயூப் ஆகியோா் மீது காவல்நிலையத்தில் கடந்த ஜனவரி 19-ஆம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

அதுபோல, மத்திய பிரதேசம், கா்நாடகம், மகாராஷ்டிரம், பிகாா், தில்லி ஆகிய பிற மாநிலங்களில் இந்த விவகாரம் தொடா்பாக காவல்நிலையங்களில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

அதனைத் தொடா்ந்து, அவா்கள் அனைவரும் முன்ஜாமீன் கோரி, அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். ஆனால், உயா்நீதிமன்றம் அவா்களுக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தது.

இதை எதிா்த்து, அவா்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனா். அந்த மனுவை கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கு தொடா்பான கடும் நடவடிக்கையிலிருந்து அவா்களுக்கு பாதுகாப்பு தர மறுப்பு தெரிவித்தது. மேலும், இந்த வழக்கில் ஜாமீன் பெற, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ள சரகத்துக்கு உள்பட்ட நீதிமன்றத்தை அணுகுமாறு உத்தரவிட்டது.

இதை எதிா்த்து அபா்ணா புரோஹித் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷண், ஆா்.எஸ். ரெட்டி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்கி, ‘இந்த விவகாரத்தில் அபா்ணா புரோஹித் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது அதிா்ச்சியளிக்கிறது. அவா் அமேசான் ஊழியா். வலைதளத்தில் வெளியாகும் தொடரில் அவா் நடிக்கவும் இல்லை, அதைத் தயாரிக்கவும் இல்லை. இருந்தபோதும், இதுதொடா்பான 10 வழக்குகளில் அவருடைய பெயரும் சோ்க்கப்பட்டுள்ளது. எனவே, அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்த அரசு சாா்பில் அண்மையில் வெளியிடப்பட்ட வழிகாட்டுதலை சமா்ப்பிக்குமாறு அரசு தலைமை வழக்குரைஞா் துஷாா் மேத்தாவுக்கு உத்தரவிட்டனா்.

மேலும், சில ஓடிடி வலைதங்கள் சில நேரங்களில் ஆபாச காட்சிகள் ஒளிபரப்புகின்றன. இதில் சமநிலை கடைப்பிடிக்கப்பட வேண்டும். எனவே, இதுபோன்ற ஆபாசக் காட்சிகளை ஒளிபரப்புவதைத் தடுக்க உரிய நடைமுறைகள் வகுக்கப்பட வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்த அனைவருக்கும் நன்றி! -பிரதமர் மோடி

கர்நாடகத்தில் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த பாஜக முயற்சி: துணை முதல்வர் டிகே சிவகுமார்

தமிழகம் உள்பட 7 மாநிலங்களில் ஒரே கட்டமாக நிறைவடைந்த வாக்குப்பதிவு

வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைப்பு

இயக்குநர் ஷங்கர் மகள் திருமணம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT