கர்நாடகத்தைச் சேர்ந்த நடிகை ராஷ்மிகா, ஹிந்திப் படங்களில் தொடர்ந்து கவனம் செலுத்துவதற்காக மும்பைக்குக் குடியேறியுள்ளார்.
விஜய் தேவரகொண்டாவுடன் கீதா கோவிந்தம் என்கிற தெலுங்குப் படத்தில் இணைந்து நடித்தார் ராஷ்மிகா. அந்தப் படத்தில் இடம்பெற்ற இன்கேம் இன்கேம் காவாலா பாடலில் நடித்து அதிக ரசிகர்களிடம் சென்றடைந்தார். 2016-ல் கிரிக் பார்ட்டி என்கிற கன்னடப் படத்தினால் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார்.
கன்னடம் மற்றும் தெலுங்குப் படங்களில் நடித்துக் கவனம் பெற்றுள்ள நடிகை ராஷ்மிகா, சுல்தான் படத்தினால் தமிழில் அறிமுகமாகினார். அப்படத்தில் கார்த்தியின் ஜோடியாக நடித்தார்.
இந்நிலையில் ஹிந்தியில் அதிகப் படங்களில் நடிக்க விருப்பம் கொண்டுள்ள ராஷ்மிகா, இதற்காக மும்பையில் குடியேறியுள்ளார். மிஷன் மஞ்சு என்கிற ஹிந்திப் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகவுள்ள ராஷ்மிகா, அமிதாப் பச்சன் நடிக்கும் குட்பை படத்திலும் நடித்து வருகிறார். இதனால் மும்பையில் ஒரு ஃபிளாட்டை வாங்கி தற்போது அதில் குடியேறியுள்ளார். இதுகுறித்த தகவலை இன்ஸ்டகிராமில் தெரிவித்துள்ளார்.
கரோனாவுக்கு முன்பு தென்னிந்தியத் திரையுலகில் ஏராளமான படங்களில் நடித்து வந்தேன். அப்போது பாலிவுட்டில் நடிக்க வேண்டும் என்கிற எண்ணம் ஏற்படவில்லை. கரோனா பாதிப்பு மற்றும் படப்பிடிப்புகள் தாமதமான பிறகு, இதுதான் பாலிவுட்டில் நுழைய சரியான தருணம் என நினைத்தேன். அப்போதுதான் மிஷன் மஞ்சு, குட்பை என ஹிந்திப் பட வாய்ப்புகள் வந்தன என மும்பைக்குக் குடியேறுவது குறித்து சமீபத்தில் பேட்டியளித்தார் ராஷ்மிகா.