தன் பெயரில் போலியாக ட்விட்டர் கணக்கு தொடங்கியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை காவல் ஆணையரிடம் மூத்த நடிகர் செந்தில் புகார் அளித்துள்ளார்.
தமிழ்த் திரையுலகின் மூத்த நடிகரான செந்தில், 1300-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம், ஹிந்திப் படங்களிலும் நடித்துள்ளார். முதல்முறையாக கதாநாயகனாக நடித்து வருகிறார் செந்தில். ஒரு கிடாயின் கருணை மனு படத்தை இயக்கிய சுரேஷ் சங்கையா, செந்தில் கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்குகிறார்.
இந்நிலையில் நடிகர் செந்தில் பெயரில் ட்விட்டர் கணக்கு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. அதில் தமிழக அரசுக்கு எதிராகப் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து தன் பெயரில் போலியாக ட்விட்டர் கணக்கு தொடங்கியவர்களைப் பற்றி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார் செந்தில்.
சினிமாவில் 40 ஆண்டு காலமாக நடித்து வருகிறேன். கடந்த ஜூன் 12 அன்று எனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் யாரோ சில விஷக்கிருமிகள் நான் பதிவு செய்தது போல, தமிழக அரசின் மீதும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் மீதும் அவதூறான கருத்துக்களை ட்விட்டரில் போலியாகப் பதிவிட்டுள்ளார்கள். எனது பெயரில் வெளியான ட்விட்டர் பதிவை நீக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். எனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் போலியான பதிவுகளைப் பதிவு செய்த நபர்களைக் கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் செந்தில் புகார் அளித்துள்ளார்.