சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த்தின் தற்போதைய நிலை குறித்து நடிகர் அருண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விடியோ வெளியிட்டுள்ளார்.
சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமானார். ஆனால் அவருக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் அவருக்கு சமீபத்தில் மூளையில் உள்ள கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை நடைபெற்றது.
இதையும் படிக்க| பா.ரஞ்சித்தின் சார்பட்டா பரம்பரை : என்ன சொல்கிறார்கள் சூர்யாவும், சிவகார்த்திகேயனும்?
இதனையடுத்து அவர் கோமாவிற்கு சென்றுவிட்டதாக கூறப்பட்டது. தற்போது அவர் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். நடிகர் வேணு அரவிந்த் குறித்த செய்திகள் வெளியானதும் ரசிகர்கள் பலரும் அவர் விரைவில் குணமாக பிரார்த்தனை செய்தனர்.
இந்த நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சந்திரலேகா தொடரில் நடிக்கும் நடிகர் அருண், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ''நடிகர் வேணு அரவிந்த் கோமா நிலையில் இல்லை. நான் அவர் மனைவியிடம் பேசினேன். அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார். ஆனாலும் மருத்துவர்களுக்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து வருகிறார். விரைவில் அவர் நலம் பெற்று வீடு திரும்புவார். அவருக்காக கடவுளிடம் வேண்டிக்கொள்ளுங்கள்'' என்றார்.