சென்னை: பத்ம விபூஷண் விருதை திருப்பியளிக்கப் போவதில்லை என்று இசையமைப்பாளர் இளையராஜா விளக்கமளித்துள்ளார்.
பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்திற்கும் இசையமைப்பாளர் இளையராஜாவிற்கும் இடையே அவரது ஒலிப்பதிவுக் கூடத்தைக் காலி செய்யும் விவகாரம் தொடர்பாக சண்டை ஏற்பட்டு நீதிமன்றம் வரை அது நீண்டு சென்றது. இதனால் அவர் மிகுந்த மனவருத்தத்தில் இருந்தார்.
இந்த விவகாரத்தின் காரணமாக மன உளைச்சலில் உள்ள இளையராஜா தனக்கு அளிக்கப்பட்ட பத்ம விபூஷண் விருதை திருப்பியளிக்கப் போவதாக ஒரு சில ஊடகங்களில் திங்கள் மதியம் தகவல் பரவியது.
இந்நிலையில் பத்ம விபூஷண் விருதை திருப்பியளிக்கப் போவதில்லை என்று இசையமைப்பாளர் இளையராஜா விளக்கமளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விடியோ ஒன்றில், ‘அன்புக்குரியவர்களே நான் சொல்லாத ஒரு கருத்தை, ஒரு தனிப்பட்ட நபருடைய கருத்தை நான் சொன்னதாக ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. இது முற்றிலும் தவறு என்பதை நான் சொல்லிக் கொள்கிறேன். அப்படி ஒரு கருத்தை நான் வெளியிடவே இல்லை என்பதையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.