நுழைவு வரி விலக்கு வழக்கில் நடிகர் தனுஷிற்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், அவரது புதிய படம் குறித்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் தனுஷ் தனது சொகுசு காருக்கு நுழைவு வரி விலக்குக் கோரிய வழக்கில், சாமானியர் கூட வரி செலுத்துவதாகக் கூறி நீதிமன்றம் அவருக்கு கண்டனம் தெரிவித்தது. இது நடிகர் தனுஷின் ரசிகர்களுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தனுஷ் ரசிகர்களின் வருத்தத்தைப் போக்கும் வகையில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் தனுஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் (வியாழக்கிழமை) துவங்குவதாக அறிவித்துள்ளது. மேலும் பூஜையின் போது நடிகர் தனுஷூடன் நித்யா மேனன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளது.
இந்த செய்தி தனுஷ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனுஷின் 44வது படமான இந்தப் படத்தை மித்ரன் ஜவஹர் இயக்குகிறார். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் ராஷி கண்ணா, பிரியா பவானி ஷங்கர், நித்யா மேனன், பிரகாஷ் ராஜ், பாரதிராஜா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.