பிரபல நடிகை சமீரா ரெட்டி, அவருடைய கணவர் மற்றும் இரு குழந்தைகள் என அனைவரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்
2002 முதல் ஹிந்திப் படங்களில் நடித்து வந்த சமீரா ரெட்டி, 2006-ல் வெளியான வாரணம் ஆயிரம் படத்தில் நடித்து கவனம் பெற்றார். இதன்பிறகு வெடி, வேட்டை போன்ற சில தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார்.
2014-ல் அக்ஷய் வர்தே என்கிற தொழிலதிபரைத் திருமணம் செய்தார். அதன்பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். ஹான்ஸ் என்கிற மகனும் நைரா என்கிற மகளும் உள்ளார்கள்.
இந்நிலையில் சமீரா ரெட்டியின் குடும்பத்தினர் அனைவரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதுபற்றி இன்ஸ்டகிராமில் அவர் கூறியதாவது”
பலரும் ஹான்ஸ், நைராவின் உடல்நிலை குறித்து கேட்டுள்ளீர்கள். கடந்த வாரம் ஹான்ஸுக்கு காய்ச்சல் அதிகமாக இருந்தது. தலைவலி, உடல்வலி , வயிற்றுவலி போன்ற பாதிப்புகள் இருந்தன. இது நான்கு நாள்களுக்கு நீடித்தது. இது அசாதாரணமாகத் தோன்றியதால் பரிசோதனை செய்து பார்த்தோம். அவனுக்கு கரோனா உறுதியாகியிருந்தது. பிறகு நைராவுக்கும் அறிகுறிகள் தோன்றின. அவளுக்குக் காய்ச்சல், வயிற்று வலி இருந்தது. கரோனாவின் இரண்டாம் அலை குழந்தைகளையும் பாதிப்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். பெரும்பாலான குழந்தைகளுக்கு லேசான அறிகுறிகளே தோன்றுவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
குழந்தைகளுக்குப் பிறகு எனக்கும் கணவருக்கும் கரோனா பாதிப்பு உறுதியானது. மருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றி வருகிறோம் என்று கூறியுள்ளார்.