நடிகர் விவேக்கின் உடலுக்குக் காவல்துறை மரியாதை அளிக்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
மாரடைப்பால் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக் இன்று அதிகாலை 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விவேக்கின் மறைவுக்குத் திரையுலகினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.
இந்நிலையில் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாட்டு மக்கள் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்த திரு. விவேக் அவர்களின் புகழுக்குப் பெருமை சேர்க்கும் வகையிலும் அன்னாரின் கலை மற்றும் சமூகச் சேவையினைக் கெளரவிக்கும் விதமாகவும் அன்னாரின் இறுதிச்சடங்குகளின்போது காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய அரசு ஆணையிட்டுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.