மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள பாந்த்ரா பகுதியில் நடிகை கங்கனா ரணாவத்துக்கு சொந்தமான பங்களா உள்ளது. அந்த பங்களாவின் கட்டட அமைப்பை முறையான அனுமதி பெறாமல் மாற்றியமைத்ததாக கூறி, அந்தக் கட்டடத்தின் சில பகுதிகளை கடந்த 9-ஆம் தேதி பிருஹன்மும்பை மாநகராட்சி அதிகாரிகள் இடித்தனா்.
இதற்கு எதிராக மும்பை உயா்நீதிமன்றத்தில் கங்கனா மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவில், ‘எனது பங்களாவின் கட்டட அமைப்பில் மாற்றங்கள் செய்ய கடந்த 2018-ஆம் ஆண்டு மாநகராட்சியிடம் அனுமதி கோரினேன். அதற்கு அனுமதியும் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது மாநகராட்சி அதிகாரிகள் முறையாக அனுமதி பெறவில்லை என்று கூறி எனக்கு நோட்டீஸ் அனுப்பினா். நான் விளக்கமளிக்க போதிய அவகாசம் அளிக்காமல் கட்டடத்தின் ஒரு பகுதியை இடித்தனா். எனது மனுவின் பேரில், மும்பை உயா்நீதிமன்றம் இந்த நடவடிக்கையை நிறுத்திவைத்துள்ளது. எனவே எனது பங்களாவின் சில பகுதிகளை இடித்த மாநகராட்சி அதிகாரிகளின் செயலை சட்டவிரோதமானது என்று அறிவித்து, ரூ.2 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது பங்களா-அலுவலகக் கட்டடத்தின் ஒருபகுதி இடிக்கப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து நடிகை கங்கனா ரணாவத் தொடுத்த வழக்கில் சிவசேனை மாநிலங்களவை உறுப்பினரும், அக்கட்சியின் தலைமைச் செய்தித் தொடா்பாளருமான சஞ்சய் ரெளத் பதிலளிக்க மும்பை உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த விவகாரம் பற்றி கங்கனா கூறியதாவது:
எனது அண்டை வீட்டுக்காரர்கள் அனைவருக்கும் மும்பை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. என்னைத் தனிமைப்படுத்தும்படி அவர்களை மாநகராட்சி மிரட்டுகிறது. எனக்கு அவர்கள் ஆதரவளித்தால் அவர்கள் வீட்டையும் இடிப்பதாகக் கூறியுள்ளது. மஹாராஷ்டிர அரசுக்கு எதிராக அவர்கள் எதுவும் பேசவில்லை. எனவே அவர்களை விட்டுவிடுங்கள் என்று கூறியுள்ளார்.