நூறாண்டுகள் ஆனாலும் எஸ்.பி.பி.யின் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும் என நடிகர் ரஜினிகாந்த் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
கரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம்(74) சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.04 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் தான் வெளியிட்டுள்ள விடியோ பதிவில்,
இன்றைக்கு மிகவும் சோகமான நாள். கடைசி வரை உயிருக்குப் போராடி எஸ்.பி.பி. அவர்கள் நம்மை விட்டு பிரிந்துள்ளார். அவரது மறைவு மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் அளிக்கிறது.
எஸ்.பி.பி பாடலுக்கு ரசிகர்களாக இல்லாதவர்கள் இந்தியாவிலே இல்லை. குரலைத் தாண்டி அவரை மக்கள் நேசிக்கக் காரணம் அவரது மனிதநேயம். பல மொழிகளில் பாடிய சிறப்பு அவருக்கே உரித்தானது. அவரது கம்பீரமான குரல் நூற்றாண்டுக்கும் மேல் ஒலித்துக்கொண்டே இருக்கும். எனினும், அவர் இன்று நம்முடன் இல்லை என்பது மிகுந்த வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்' என்று தனது இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.