நடிகர் வடிவேல் பாலாஜியின் மரணம் குறித்த தனது வேதனையை நடிகர் ஆதவன் வெளிப்படுத்தியுள்ளார்.
மதுரையை பூா்வீகமாகக் கொண்ட வடிவேல் பாலாஜி, மிமிக்ரி கலைஞராக தன் வாழ்க்கையைத் தொடங்கினாா். திருவிழா மேடை நிகழ்ச்சிகளில் நடிகா் வடிவேலுவின் உடல்மொழியும் அவரைப் போன்ற குரல் கொண்டவராகவும் திகழ்ந்ததால் வடிவேல் பாலாஜி என்று அழைக்கப்பட்டாா். தொலைக்காட்சி சேனல்களில் நகைச்சுவை நிகழ்ச்சிகளில் இடம் பெற்று பிரபலமானாா். குறிப்பாக, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ‘அது இது எது’, ‘கலக்கப் போவது யாரு’, ‘கலக்கப் போவது யாரு சாம்பியன்ஸ்’ உள்ளிட்ட பல நிகழ்ச்சியில் பங்கெடுத்துள்ளாா்.
வடிவேலு மாதிரியான தோற்றங்களில் நடித்து வந்ததால், இவருக்கென தனி ரசிகா் வட்டம் இருந்து வந்தது. சின்னத்திரையில் பிரபலமானதைத் தொடா்ந்து, படங்களிலும் நடிக்கத் தொடங்கினாா். ‘யாருடா மகேஷ்’, ‘கோலமாவு கோகிலா’ உள்ளிட்ட 20 -க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளாா். கரோனா பொது முடக்கத்துக்குப் பின் சின்னத்திரை படப்பிடிப்புக்கு அனுமதியளிக்கப்பட்டதால், சில நிகழ்ச்சிகளின் படப்பிடிப்பில் தொடா்ந்து பங்கேற்று வந்தாா்.
இந்நிலையில் நடிகா் வடிவேல் பாலாஜி (42) மாரடைப்பு காரணமாக சென்னையில் வியாழக்கிழமை காலமானாா்.
இரு வாரங்களுக்குத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வடிவேல் பாலாஜி சில தினங்களுக்கு முன்பு வீட்டுக்குத் திரும்பியுள்ளார். பிறகு அவருக்கு மீண்டும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டார். அங்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் வடிவேல் பாலாஜிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை மரணமடைந்தார். வடிவேல் பாலாஜிக்கு மனைவி, மகன், மகள் உள்ளனா். இறுதிச் சடங்குகள் இன்று நடைபெறுகின்றன.
வடிவேல் பாலாஜியின் உடலுக்கு நேரில் செலுத்திய நடிகர் ஆதவன், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
எல்லோரையும் நன்கு சிரிக்க வைக்கக் கூடியவர் வடிவேல் பாலாஜி. கடந்த 20, 25 நாள்களாக அவருடைய பிரச்னையைக் கவனித்துக்கொண்டு வந்தேன். சில மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கு மட்டும் காப்பீடு கோருவோம். இதர நோயாளிகளுக்கு காப்பீடு கோரமாட்டோம் எனச் சொல்லிவிட்டார்கள். ஒரு நல்ல மருத்துவமனையில் கூட அவருக்குச் சிகிச்சை பார்க்க முடியாமல் போய்விட்டது. அதுதான் வருத்தமாக இருந்தது. அவருடைய உடல்நிலையில் பிரச்னை இருந்தும் அதைச் சொல்லாமல் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்துவிட்டார்கள். காரணம், பணம் கட்ட முடியவில்லை என்பதால் தான். முடிந்தளவுக்கு எல்லோரும் புரட்டிக் கொடுத்தோம். இருந்தாலும் மீதிப் பணத்தைக் கட்ட முடியவில்லை என்பதால் அனுப்பிவிட்டார்கள். அதைச் சொல்லக்கூட இல்லை.
அரசு மருத்துமனையில் அதைக் கண்டுபிடித்தார்கள். 3 நாளுக்கு முன்னால் இப்படி இருந்ததே என்றார்கள். அவருக்குச் சிகிச்சை அளித்திருக்கலாம். வாழ்நாள் முழுக்க இந்த வருத்தம் எனக்கு இருக்கும். இப்படியொரு நிலைமை யாருக்கும் ஏற்படக் கூடாது. எங்களால் இதிலிருந்து மீளவே முடியவில்லை. எங்களுக்குப் பரிச்சயமான, கூடவே வாழ்ந்த முகம். இதுபோன்ற நிலைமை ஒருவருக்கு ஏற்பட்டால் மருத்துமனைகள் சரியாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்றார்.