கங்கனா ரணாவத் நடிக்கும் படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய மறுத்ததாக பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் கூறியுள்ளார்.
இதுபற்றி ட்விட்டரில் பி.சி. ஸ்ரீராம் கூறியதாவது:
கங்கனா கதாநாயகியாக நடிக்கும் படத்தை நிராகரிக்க வேண்டியதாகி விட்டது. அப்படத்தில் பணியாற்றுவது எனக்குச் சரியாகப் படவில்லை. இதைப் படக்குழுவினரிடம் தெரிவித்தேன். அவர்களும் அதை ஏற்றுக்கொண்டு விட்டார்கள். சில நேரங்களில் நமக்கு எது சரி என்று எண்ணுகிறோமோ அதைத்தான் செய்யவேண்டும். அப்படக்குழுவினருக்கு என் வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.
கங்கனாவின் முதல் தமிழ்ப் படமான தாம் தூம்-மில் இணை ஒளிப்பதிவாளராக பி.சி. ஸ்ரீராம் பணியாற்றியுள்ளார்.
கடைசியாக, நித்யா மேனன் நடித்த பிராணா என்கிற படத்துக்கு ஒளிப்பதிவு செய்தார் பி.சி. ஸ்ரீராம். அடுத்ததாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ரங் டே என்கிற தெலுங்குப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சீனி கம், பா, ஷமிதாப், கி அண்ட் கா, பேட்மேன் ஆகிய ஹிந்திப் படங்களை எடுத்த தமிழரான ஆர். பால்கி, அடுத்த படத்துக்குத் தயாராகிவிட்டார். பால்கி இதுவரை எடுத்த ஐந்து படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்த பி.சி. ஸ்ரீராம் தான் பால்கியின் அடுத்த படத்துக்கும் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றவுள்ளார். இருவரும் இணைந்து பணியாற்றும் 6-வது படம் இது.