மாஸ்டர் திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிடுவதையே விரும்புவதாக படக் குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுபற்றி படக் குழு தரப்பில் இன்று (சனிக்கிழமை) வெளியிட்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
"மாஸ்டர் படம் திரையரங்குகளில் வெளியாகும் அந்தப் பெரிய நாளுக்காக உங்களைப்போல் நாங்களும் காத்திருக்கிறோம். கடந்த சில நாள்களாக பரவி வரும் வதந்திகள் குறித்து எங்களது தரப்பு நிலைப்பாட்டை தெளிவுபடுத்த விரும்புகிறோம்.
படத்தை ஓடிடி தளங்களில் வெளியிட புகழ்பெற்ற ஓடிடி நிறுவனங்கள் எங்களை அணுகின. ஆனால், நாங்கள் திரையரங்குகளில் வெளியிடுவதையே விரும்புகிறோம்.
தற்போது நிலவி வரும் நெருக்கடிகளிலிருந்து திரைத்துறை மீண்டு வருவதற்கான நேரம் இது. திரையரங்கு உரிமையாளர்கள் எங்களுடனும், தமிழ் திரைத் துறை மீண்டு வருவதற்கும் துணை நிற்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறோம்.
விரைவில் நல்ல செய்தியுடன் உங்களிடம் வருவோம் என்று எதிர்பார்க்கிறோம்."
விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பிலும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகவிருந்தது. ஆனால், கரோனா பொது முடக்கம் காரணமாக வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டுள்ளது.