எ சூட்டபிள் பாய் என்கிற இணையத் தொடரில் கோயிலில் இடம்பெற்றுள்ள முத்தக்காட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்துக்கு எதிராக சமூகவலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள். இதையடுத்து இரு நெட்பிளிக்ஸ் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விக்ரம் சேத் எழுதிய எ சூட்டபிள் பாய் என்கிற நாவலை அடிப்படையாகக் கொண்டு அதே பெயரில் இணையத்தொடர் ஒன்றை இயக்கியுள்ளார் மீரா நாயர். அக்டோபர் 23 அன்று நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியானது. இஷான் கட்டர், தபு, தன்யா, ரசிகா போன்றோர் நடித்துள்ளார்கள்.
இந்த இணையத் தொடரில் கோயிலில் காதலர்கள் முத்தமிட்டுக்கொள்வது போல ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது. கோயிலில் வைத்து இஸ்லாமிய இளைஞரும் இந்துப் பெண்ணும் முத்தமிடும் காட்சி, மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகக் கூறி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தைப் புறக்கணிப்போம் எனச் சமூகவலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள். ட்விட்டரில் #BoycottNetflix என்கிற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆகியுள்ளது.
இதையடுத்து இணையத் தொடரை உருவாக்கியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் மத்தியப் பிரதேச மாநிலத்தின் உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா கூறினார். மத்தியப் பிரதேசத்தின் மகேஷ்வர் நகரில் உள்ள கோயிலில் இக்காட்சி படமாக்கப்பட்டுள்ளதால் இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறையினரிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கெளரவ் திவாரி அளித்த புகாரின் பேரில் மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக மோனிகா ஷெர்கில், அம்பிகா குரானா ஆகிய இரு நெட்பிளிக்ஸ் அதிகாரிகள் மீது மத்தியப் பிரதேசக் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளதாக நரோத்தம் மிஸ்ரா கூறியுள்ளார்.