4ஜி பட இயக்குநரும் ஷங்கரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவருமான ஏவி அருண் பிரசாத் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார்.
ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெங்கட் பாக்கர் என்கிற பெயரில் அருண் பிரசாத் இயக்கியுள்ள படம் - 4ஜி. இரண்டு வருடங்களுக்கு முன்பு படப்பிடிப்பு முடிவடைந்தாலும் இந்தப் படம் இன்னமும் வெளியாகவில்லை. பிரபல இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக அருண் பிரசாத் பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில் மேட்டுப்பாளையத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் அருண் பிரசாத் உயிரிழந்துள்ளார். அன்னூரைச் சேர்ந்த அருண் பிரசாத் இன்று காலையில் அன்னூரிலிருந்து மேட்டுப்பாளையத்துக்கு பைக்கில் சென்றுகொண்டிருந்தார். திடீரென எதிரே வந்துகொண்டிருந்த டிப்பர் லாரி மீது பைக் மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். தான் இயக்கிய முதல் படம் திரையரங்குகளில் வெளியாவதைக் காணும் முன்பே அவருடைய வாழ்க்கை முடிந்துவிட்டது.
நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் ட்விட்டரில் தெரிவித்ததாவது:
எப்போதும் நட்போடும் நம்பிக்கையோடும் பழகும் ஒரு இனிய சகோதரன் என் இயக்குனர் வெங்கட் பாக்கர் சாலை விபத்தில் மரணமடைந்த செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன். அவரை இழந்து வாடும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல். நண்பரின் ஆன்மா இறைவனடி இளைப்பாறட்டும் என்று தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
இயக்குநர் ஷங்கர் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் பலரும் அருண் பிரசாத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.