ஹிந்தி தொலைக்காட்சி நடிகரான பர்த் சம்தான், கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதுபற்றி ட்விட்டரில் பர்த் சம்தான் கூறியதாவது:
எனக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த சில நாள்களாக என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் பரிசோதனை செய்துகொள்ளுங்கள். நான் சுயமாகத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். மும்பை மாநகராட்சிக்கு நன்றி. அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்று கூறியுள்ளார்.
கரோனா ஊரடங்கால் 3 மாதங்கள் கழித்து ஏக்தா கபூர் தயாரிக்கும் ஹிந்தித் தொடரின் படப்பிடிப்பில் கலந்துகொண்டார் பர்த் சம்தான். கடந்த சனிக்கிழமை அவருக்கு கரோனா அறிகுறிகள் ஏற்பட்டதால் ஞாயிறன்று படப்பிடிப்புக்குச் செல்லவில்லை. பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் பர்த் சம்தானுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து அவருடன் இணைந்து நடித்த நடிகர்களுக்கும் தற்போது பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த மாதம் ஆரம்பிக்கப்பட்ட தொலைக்காட்சித் தொடரின் படப்பிடிப்பு தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.