"ஒத்த செருப்பு' படத்தின் மூலம் திரையுலகில் புது உச்சத்தை தொட்டிருப்பதாக இயக்குநர் பார்த்திபனுக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்தார்.
பார்த்திபன் இயக்கி, தயாரித்து, நடித்துள்ள படம் "ஒத்த செருப்பு'. ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ள படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ரசூல் பூக்குட்டி இந்தப் படத்தின் ஒலி வடிவமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். எப்போதுமே தனது இயக்கத்தில் புதுமையைச் செய்யும் பார்த்திபன், இந்தப் படத்திலும் புதுமையைச் செய்துள்ளார். படம் முழுவதும் பார்த்திபன் என்கிற ஒற்றைக் கதாபாத்திரம் மட்டுமே இடம்பெறும். மீதமுள்ள அனைத்துக் கதாபாத்திரங்களின் குரல்கள் மட்டுமே கேட்கும். இந்தப் படத்தைப் பார்த்த பல்வேறு திரையுலகப் பிரபலங்களும் பாராட்டி வருகிறார்கள். இந்தப் படத்தை சமீபத்தில் பார்த்த நடிகர் ரஜினிகாந்த், பார்த்திபனை பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி: தனது ஒவ்வொரு படத்திலும் தனித்துவத்தைக் காட்டும் பார்த்திபன், இந்தப் படத்தின் மூலம் உச்சத்தைத் தொட்டிருக்கிறார். இது தமிழ்த் திரையுலகில் புதுமையான, புரட்சியான பாராட்டுக்குரிய முயற்சி. அவருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, பின்னணி இசை, பின்னணி குரல்கள் அனைத்தும் அற்புதம். படம் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார். இந்தப் படம் வரும் 20-ஆம் தேதி திரைக்கு வருகிறது.