பாட்டியாகிறார் ரவீனா டாண்டன்.. நெகிழ்வூட்டும் முன்கதைச் சுருக்கம்!

பாட்டியாகிறார் ரவீனா டாண்டன்.. நெகிழ்வூட்டும் முன்கதைச் சுருக்கம்!

‘யாராவது எக்ஸ்ட்ரா பேக்கேஜுகளுடன் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள முன் வருவார்களா? திருமண வயதில் இருக்கும் நீ, இப்போது போய் இந்தக் குழந்தைகளை தத்தெடுத்தாயானால், பிறகு உன் வாழ்க்கை கேள்விக்குறி தான்

நடிகை ரவீனா டாண்டன் கூடிய விரைவில் பாட்டியாகப் போகிறார். அதெப்படி அவரது இரண்டு குழந்தைகளும் இன்னும் சிறுவர்கள் தானே? அதற்குள் பாட்டியாகி விட்டாரா? என்று ஆச்சர்யமாக இருக்கிறதா? 

ரவீனா தனது 21 வயதில், 1995 ஆம் வருடத்தில் உடல்நலக் குறைவால் இறந்து போன தனது உறவினரின் இரு குழந்தைகளான பூஜா மற்றும் சய்யாவைத் தத்தெடுத்துக் கொண்டார். அந்த இரு பெண் குழந்தைகளுக்கும் ரவீனா தான் தாயாக இருந்து இதுநாள் வரை வளர்த்து வந்தார். 

உறவினர் மறைந்ததும் அந்தக் குழந்தைகள் முதலில் பாதுகாவலர் ஒருவரின் பொறுப்பில் விடப்பட்டனர். ஆனால், அந்தப் பாதுகாவலர் இந்தக் குழந்தைகளைச் சரிவர கவனித்துக் கொள்ளவில்லை என்று சந்தேகித்த ரவீனா உடனடியாக குழந்தைகளைச் சட்டபூர்வமாக தன்னுடைய மகள்களாகத் தத்தெடுத்துக் கொண்டு அவர்களது பொறுப்பை ஏற்றுக் கொண்டு விட்டார். அச்சமயத்தில் ரவீனாவின் இந்த முடிவு குறித்து பாலிவுட்டில் பலரும் புறம் பேசினார்கள். 

ஏன், சிலர் ரவீனாவிடமே நேருக்கு நேராக, ‘யாராவது எக்ஸ்ட்ரா பேக்கேஜுகளுடன் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள முன் வருவார்களா? திருமண வயதில் இருக்கும் நீ, இப்போது போய் இந்தக் குழந்தைகளை தத்தெடுத்தாயானால், பிறகு உன் வாழ்க்கை கேள்விக்குறி தான்’ என்றெல்லாம் பயமுறுத்திப் பார்த்தார்கள். ஆனால் ரவீனா... என்னைத் திருமணம் செய்து கொள்ள விரும்புபவர்கள், என்னை மட்டுமல்ல, என் வளர்ப்பு மகள்களையும், நான் உயிராக நேசிக்கும் எனது வளர்ப்பு நாய்களையும் கூட மனப்பூர்வமாக தங்கள் வாழ்வில் இணைத்துக் கொள்ள ஒப்புக் கொள்ள வேண்டும். அப்படி ஒருவர் வந்தால் வரட்டும், இல்லாவிட்டால் போகட்டும், எனக்குக் கவலையில்லை என்று ஒரேயடியாகச் சாதித்தார்.

அவரது சாதனைக்குத் தோள் கொடுக்கும் வகையில் அனில் தடானி வந்து சேர்ந்தார்.

ஆம், எக்ஸ்ட்ரா பேக்கேஜுகளுடன் ரவீனாவை மிகச் சந்தோஷமாக மணந்துகொண்டு இதோ இப்போது இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். மாமனார், மாமியார், கணவர், தனது இரண்டு குழந்தைகள், வளர்ப்புக் குழந்தைகள் இருவர், பிளஸ் தனது வளர்ப்பு நாய்கள் என மிகச்சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் நடிகை ரவீனா.

அவர், தான் 21 வயதில் 2 குழந்தைகளைத் தத்தெடுத்த போது பயமுறுத்திப் பார்க்க நினைத்த இந்த உலகத்துக்கும், சமூகத்துக்கும் சொல்லிக் கொள்ள விழைவது ஒன்று உண்டெனில் அது இது தான்;

’உங்களுக்கு தத்தெடுக்கும் விருப்பம் இருந்தால், தாராளமாக முயற்சி செய்யுங்கள், விருப்பமிருக்கிறது, ஆனால் முடியாத சூழல் எனில் உங்களிடம் 100 ரூபாய் இருந்தால் அதை ஏதாவது ஆதரவற்றோர் இல்லத்துக்கு அளியுங்கள். ஏதாவது ஒரு குழந்தையின் கல்விக்கோ அல்லது மதிய உணவுக்கோ பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள். மிஞ்சிப் போனால் நாளொன்றுக்கு 5 ரூபாயாவது அடுத்தவர்களுக்கு உதவ வேண்டும் என்று மனதார நினையுங்கள். உங்கள் மனதில் இந்த மனிதர்களுக்கு கொஞ்சம் இடமளியுங்கள்’ என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

ரவீனா ராக்ஸ்!

Image Courtesy: Bollywoodshaadis.com
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com