எனக்கு இந்த அவமானம் தேவையா? இந்திப் படத்திலிருந்து விலகிய ராகவா லாரன்ஸ் ஆவேசம்!

காஞ்சனா 3 படம் வசூலில் சாதனை நிகழ்த்திக் கொண்டிருந்த அதே சமயத்தில் அதை இந்தியில் படமாக்க முடிவு செய்தார் இயக்குநரும் நடிகருமான ராகவா லாரன்ஸ்.
எனக்கு இந்த அவமானம் தேவையா? இந்திப் படத்திலிருந்து விலகிய ராகவா லாரன்ஸ் ஆவேசம்!

காஞ்சனா 3 படம் வசூலில் சாதனை நிகழ்த்திக் கொண்டிருந்த அதே சமயத்தில் அதை இந்தியில் படமாக்க முடிவு செய்தார் இயக்குநரும் நடிகருமான ராகவா லாரன்ஸ்.

காஞ்சனா படத்தை லக்‌ஷ்மி பாம் என்கிற பெயரில் இயக்கி  வந்தார். அக்‌ஷய் குமார் கதாநாயகனாகவும், கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் அத்திரைப்படத்திலிருந்து திடீரென விலகிவிடார் ராகவா லாரன்ஸ். இது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது.

2011 ஆண்டில் வெளிவந்த 'காஞ்சனா' திரைப்படம் அதுவரை வெளிவந்த பேய்ப் படங்களின் ரெகார்டை உடைத்து அதீத வெற்றி கண்டது. இயக்குனராகவும், ஹீரோவாகவும் ராகவா லாரன்ஸுக்கு மிகப்பெரிய பிரேக் அளித்த திரைப்படம் அது.

அதற்கு முன்பே முனி பார்ட் 1 மூலமாக பேய்ப்படங்களுக்கான தனி ஜானரில் தனக்கென துண்டு போட்டு ஸ்திரமான இடமொன்றை ராகவா லாரன்ஸ் பிடித்திருந்தாலும் ‘காஞ்சனா’ திரைப்படம் ஒரு திருநங்கையின் ஆவியை மையமாக வைத்து வெளிவந்த போது அதற்கான கூடுதல் அங்கீகாரம் கிடைத்தது. அத்துடன் அத்திரைப்படத்தில் தமிழ் ரசிகர்களின் கற்பனை எல்லைகளையும் தாண்டி அதி அற்புதமாக திருநங்கை கதாபாத்திரத்தை உள்வாங்கி நடித்திருந்தார். அதன் பின் தொடர்ச்சியாக வந்த படங்கள் அனைத்திலும் ராகவா ஸ்கோர் செய்திருந்தார். 

இந்நிலையில் இந்தி ‘லக்‌ஷ்மி பாம்’ படத்தை தான் இயக்கப் போவதில்லை, அதிலிருந்து விலகுகின்றேன் என ராகவா லாரன்ஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

அதில் அவர் குறிப்பிட்டது, 'என் அன்பு நண்பர்கள் மட்டும் ரசிகர்களுக்கு, பணம் மற்றும் புகழைவிட இந்த உலகத்தில் தன்மானம் தான் ஒரு மனிதருக்கு மிகவும் முக்கியம். எனவே ‘லக்‌ஷ்மி பாம்’ படத்திலிருந்து நான் விலகுகிறேன்.’ என்று பதிவிட்டிருக்கிறார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில், ‘இது குறித்து வேறு எதுவும் வெளிப்படையாக கூற விரும்பவில்லை ஏனெனில் பல காரணங்கள் இதற்கு பின்னணியில் உள்ளது. இருந்தாலும் ஒரு விஷயத்தை பகிர்ந்து கொள்கிறேன். லக்‌ஷ்மி பாம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியானது. அப்படத்தின் இயக்குநரான என்னிடம் இது பற்றி ஒன்றுமே தெரிவிக்கப்படவில்லை. வேறொருவர் சொல்லி தான் எனக்கே பர்ஸ்ட் லுக் வெளியானது தெரிந்தது. அதோடு பட போஸ்டர் வடிவமைக்கப்பட்டதும் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அதனால் தன்னை மரியாதையற்ற இடத்தில் காஞ்சனா ரீமேக் லக்‌ஷ்மி பாம் படத்தை இனி நான் இயக்கப் போவது இல்லை' என பதிவிட்டுள்ளார் ராகவா லாரன்ஸ். 

அவரின் இந்த முடிவு கோலிவுட் மற்றும் பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படத்தின் தயாரிப்பாளர்கள் நேற்று மும்பையில் கூடி ஆலோசனை நடத்தியுள்ளனர். நீண்ட ஆலோசனைக்குப் பின் வேறு ஒரு புதிய இயக்குநரை வைத்து படத்தை முடிக்க முடிவு செய்துள்ளனர்.

படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு செப்டம்பர் மாதத்தில் தொடங்கவிருப்பதாகவும், அதற்காக நடிகர் அக்‌ஷய்குமார் 40 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கியுள்ளார் என்றும் தெரிகிறது. பிரச்னை அதற்குள் முடிவுக்கு வந்துவிடும். வேறு ஒரு இயக்குநரை வைத்து மீதிப் படத்தை இயக்க முடிவு செய்துள்ளதாக பாலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது. விரைவில் அந்த இயக்குநர் யார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com