பா. இரஞ்சித் வழக்கில் ஆதாரங்களுடன் விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்ய காவல்துறைக்கு உயர் நீதிமன்றக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், திருப்பனந்தாள் காவல்துறையினர் இயக்குநர் பா. இரஞ்சித் மீது சர்ச்சைக்குரிய வகையிலும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், இயக்குநர் பா. இரஞ்சித் முன் ஜாமீன் வழங்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், ஜூன் 5 -ஆம் தேதி திருப்பனந்தாளில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேரரசர் ராஜராஜ சோழனின் வரலாற்று உண்மைகள் சிலவற்றை குறிப்பிட்டேன். நமது வரலாறு பேரரசன் ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலம் பொற்காலம் எனக் குறிப்பிடுகிறது. ஆனால், பல்வேறு சமூக சீர்திருத்தவாதிகளும் ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலம் ஒடுக்கப்பட்ட மக்களின் கற்காலம் என குறிப்பிட்டுள்ளனர். பல்வேறு வரலாற்றுப் புத்தகங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களையே நான் குறிப்பிட்டேன். இந்த தகவலை வேறு பலரும் பேசி உள்ளனர். எனது பேச்சு எந்தத் தரப்பு மக்களிடையேயும் பிளவை ஏற்படுத்தும் வகையில் அமையவில்லை. ஆனால் என்னுடைய பேச்சு மட்டும் சமூக வலைதளங்களில் தவறாகச் சித்தரிக்கப்பட்டு வருகிறது. நான் உள்நோக்கத்துடன் எந்த கருத்தையும் பதிவு செய்யவில்லை. ஆகவே இந்த வழக்கில் எனக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது பா. இரஞ்சித்தை ஜூன் 21 -ஆம் தேதி வரை கைது செய்யக் கூடாது என நீதிபதி உத்தரவிட்டார். அதை ஏற்று திருப்பனந்தாளில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் பா. இரஞ்சித்தைக் கைது செய்ய மாட்டோம் என அரசுத் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, பேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பு இல்லையா என்று நீதிபதி கேள்வியெழுப்பினார். பிறகு, பா. இரஞ்சித் வழக்கில் ஆதாரங்களுடன் விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்ய காவல்துறைக்கு உயர் நீதிமன்றக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.