நடிகர், நாடக ஆசிரியர், வசனகர்த்தா என பன்முகங்களைக் கொண்ட ‘கிரேஸி’ மோகன் (66) மாரடைப்பு காரணமாக சென்னையில் கடந்த வாரம் திங்கள் அன்று காலமானார். திடீர் மாரடைப்பு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கிரேஸி' மோகன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கிரேஸி மோகனுக்கு மனைவி நளினி, மகன்கள் அஜய், அர்ஜுன் உள்ளனர்.
கிரேஸி மோகன் மறைவுக்குப் பிறகு கிரேஸி கிரியேஷன்ஸ் நிறுவனம் நடத்தவுள்ள நாடகம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. கமல் ஹாசன் தலைமையில் மாது பாலாஜி உள்ளிட்ட கிரேஸி கிரியேஷன்ஸ் நாடகக் குழுவினர் நடிக்கும் கிரேஸி பிரீமியர் லீக் என்கிற நாடகம் நடைபெறவுள்ளது. கிரேஸி மோகன் வசனம் எழுதி நடித்த நாடகங்களின் சிறந்த காட்சிகளின் தொகுப்பாக இந்த நாடகம் அமையவுள்ளது.
சென்னை நாரதகானா சபாவில் வரும் 30-ம் தேதி கமல் தலைமையில் இந்த நாடகம் நடைபெறவுள்ளது. கமல், மெளலி, நல்லி செட்டியார், காயத்ரி கிரிஷ் போன்றோர் கிரேஸி மோகன் குறித்த தங்களுடைய நினைவுகளை நாடக மேடையில் பகிர்ந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.