நயன்தாராவின் நடிப்பில் உருவாகியுள்ள த்ரில்லர் வகைத் திரைப்படம் 'கொலையுதிர் காலம்'.
தமிழ் சினிமாவின் 'லேடி சூப்பர் ஸ்டார்' என்று புகழப்படுபவர் நடிகை நயன்தாரா. பல்வேறு விதமான கதாபாத்திரங்களையும் ஏற்று திறம்பட நடித்து வருகிறார்.
இவர் இப்போது கமல்ஹாசனின் 'உன்னைப்போல் ஒருவன்' மற்றும அஜித்தின் 'பில்லா - 2' ஆகிய படங்களை இயக்கிய சக்ரி டோலட்டி இயக்கத்தில் ”கொலையுதிர் காலம்” என்ற திகில் படத்தில் நடித்துள்ளார். அவருடன் இந்தப் படத்தில் பிரதாப் போத்தன், பூமிகா, ரோகிணி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ஜீன் 14-ம் தேதி ரிலீஸுக்குத் தயாராகிவிட்ட நிலையில் கொலையுதிர் காலம் படத்தை தடை செய்ய வேண்டும் என்று வழக்கு ஒன்று தொடரப்பட்டது. தற்போது படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விடியும் முன் என்ற படத்தை இயக்கியிருக்கும் பாலாஜி குமார் மறைந்த எழுத்தாளர் சுஜாதாவின் கொலையுதிர் காலம் நாவலின் திரை உரிமத்தை 10 லட்சம் ரூபாய்க்கு தனது தாய் பெயரில் ஏற்கனவே வாங்கியிருந்தார். சக்ரி டோலட்டி மற்றும் படக்குழுவினர் தற்போது இப்படத்தை வெளியிட்டால் அது காப்புரிமையை மீறிய செயல். எனவே கொலையுதிர் காலம் என்ற தலைப்பில் படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும் என பாலாஜி குமார் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணசாமி ராமசாமி, 'கொலையுதிர் காலம்' என்ற பெயரில் நயன்தாரா நடித்த படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து, மனுவுக்கு ஜூன் 21-ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி படத்தயாரிப்பு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டார்.