அரசியல் பிரவேசத்திற்குப் பிறகு நடிகர் கமல்ஹாசன் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியை மட்டுமே தொகுத்து வழங்கி வருவது அனைவரும் அறிந்ததே. கமல் நடிப்பில் வெளியான விஸ்வரூபம் 2 படத்திற்குப் பின்னர் சபாஷ் நாயுடு படம் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் சில எதிர்பாராத தடைகளால் அந்தப் படம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கமல்ஹாசன் கடந்த 2017-ம் ஆண்டு அறிவித்திருந்த 'தலைவன் இருக்கிறான்' படம் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். அரசியல், பொருளாதாரம் மற்றும் நிழல் உலகம் உள்ளிட்ட விஷயங்களை மையமாகக் கொண்ட ஒரு த்ரில்லர் படமாக இது இருக்கும் என்றனர் படக்குழுவினர்.
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் கமலுடனான எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது ட்விட்டரில் பகிர்ந்து, 'கமல்ஹாசனுடன் பணி செய்வது சந்தோஷத்தையும், ஆர்வத்தையும் தருவதாக பதிவிட்டுள்ளார். அதற்கு பதிலாக கமல்ஹாசன், 'உங்கள் பங்கேற்பினால் எங்கள் குழு வலுவடைகிறது ஏ.ஆர்.ஆர். அதற்கு எங்கள் நன்றி. சில படங்களை உருவாக்கும் போது மனதுக்கு சரியாகவும் சந்தோஷமாகவும் உணர முடியும். தலைவன் இருக்கிறான் அத்தகையது. உங்களுடைய உற்சாகம் அலை போன்றது அது எங்கள் ஒட்டுமொத்த குழுவினருக்கும் பரப்புகிறேன்.’ என்று பதிவிட்டுள்ளார்.
தமிழ் மற்றும் இந்தியில் உருவாகவிருக்கும் இந்தப் படத்திற்கு இந்தியில் அமர் ஹைன் எனப் பெயரிடப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர். கமல்ஹாசனுக்கு இணையான முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அமீர் கானை நடிக்க வைக்கவிருக்கிறார்கள். இப்படத்தில் நடிக்க ஏற்கனவே சயப் அலிகான் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.