பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் வருடம் ஆரவ் - ஓவியா காதல் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது. ஓவியா அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே வருவதற்கு அந்தக் காதலே முக்கியக் காரணமாக அமைந்தது.
கடந்தமுறை இரண்டு காதல்கள். மஹத் - யாஷிகா, ஷாரிக் - ஐஸ்வர்யா தத்தா. ஆரம்பத்தில் காதலாக தெரிந்த இவர்களுடைய நட்பு பிறகு இயல்பு நிலைக்குத் திரும்பியது.
இந்நிலையில் இந்த முறை நடிகை அபிராமியும் முகனும் காதலர்களாக ஆவதற்கான தருணங்கள் உருவாகியுள்ளன. முகன் மீதான தன் ஆழமான நட்பை நேற்றைய நிகழ்ச்சியில் வெளிப்படுத்தினார் அபிராமி.
நேற்றைய நிகழ்ச்சியில் போட்டியாளர்களிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டன.
நீ நண்பனானது என் பாக்கியம் என்கிற கேள்வி அபிராமி வெங்கடாச்சலத்துக்கு அளிக்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில்:
முகன். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓர் ஆண் - நெருக்கமான, நம்பகமான நண்பராகக் கிடைப்பார் என நான் எதிர்பார்க்கவில்லை. இது நட்பா அல்லது நட்புக்கும் மேலயா என்பதில் எனக்கு நிறைய கேள்விகள் உண்டு. முகன் என்னுடைய நண்பராகக் கிடைத்ததற்கு நான் ஆசிர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன். என் சுகம், துக்கம் எல்லாம் பரிமாறிக்கொள்வதற்கு எனக்கு நீ தோள் கொடுத்திருக்கிறாய். ஐ லவ் யூ என்றார்.
அபிராமி சொன்ன கடைசி வார்த்தைகளைக் கேட்டு வெட்கப்பட்டவர் போல் நடித்தார் முகன். பிறகு, இவர் இருந்தால் நேரம் போவதே தெரியாது என்கிற கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு முகன் அளித்த பதில்: அபிராமி. அவரிடம் நிறைய விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளமுடியும் என்றார்.
விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 சமீபத்தில் தொடங்கியுள்ளது. விஜய் டி.வி.யில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே பரவலான வரவேற்பு உண்டு. தொலைத் தொடர்பு, இணையம், தொலைக்காட்சி என எந்தத் தகவல் தொடர்பு சாதனங்களும் இல்லாமல் 100 நாள்கள் இருப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் போட்டி விதி. கடந்த இரண்டு ஆண்டுகளாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், இந்த முறையும் தொகுத்து வழங்குகிறார். பிக் பாஸ் முதல் சீஸனை நடிகர் ஆரவ்வும் கடந்த வருட போட்டியை நடிகை ரித்விகாவும் வென்றார்கள். சமூகவலைத்தளங்களில் பிக் பாஸ் குறித்த விவாதங்கள் அதிகமாக இடம்பெறுவதால் இதில் இடம்பெற்ற போட்டியாளர்கள் அதிகக் கவனம் பெற்று புகழை அடைந்துள்ளார்கள்.