கணவர்களைக் கேள்வி கேட்கும் நேரம் இது! 

கணவர்களைக் கேள்வி கேட்கும் நேரம் இது! 

மும்பையில் நடைபெற்ற கலா-சம்ருதி சர்வதேச குறும்பட விழாவில் 'தி மாஸ்குனினிட்டி'

மும்பையில் நடைபெற்ற கலா-சம்ருதி சர்வதேச குறும்பட விழாவில் 'தி மாஸ்குலினிட்டி' எனும் குறும்படம் பங்கேற்றது. இந்தப் படத்தை இயக்கிய எக்ஸ்.ஆர்.ஜான், விமர்சனரீதியில் (கிரிட்டிக் அவார்டு) சிறந்த இயக்குநருக்கான விருதை பெற்றார்.

மாஸ்குலினிட்டி என்றால் ஆண்பால் என்ற அர்த்தம் கொள்ளலாம். 7 நிமிடங்களுக்குள் முடிந்துவிடும் இந்தக் குறும்படம் கணவர்களை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளது. படத்தின் கதை என்னவெனில், ஒரு தம்பதியர். அவர்களுக்கு குழந்தை இல்லை. மருமகளிடம்தான் குறை இருக்கிறது என்று சந்தேகிக்கும் மாமியாருக்காக, அவள் குழந்தையின்மை பரிசோதனைக்காக மருத்துவமனை ஏறி இறங்குகிறாள். ஆனால், தனக்கு எந்தப் பிரச்னையும் இல்லையென தெரிந்து கொள்கிறாள், அதை கணவரைத் தவிர யாரிடமும் சொல்லாமல் மறைக்கிறாள். ஆனால், கணவர் தனக்குத்தான் பிரச்னை என்று சொல்ல வேண்டும் என்று விரும்புகிறாள். தனக்குதான் பிரச்னை என்று கணவருக்கும் தெரியும். ஆனால், அதை அவர் வெளிப்படையாக தனது குடும்பத்தினரிடம் தெரிவிக்க முன்வருகிறாரா? இல்லையா? என்பதே குறும்படத்தின் கதை.

மிக நேர்த்தியாக இந்தக் கதை விவரிக்கப்பட்டிருக்கிறது. கதைப்படி, மனைவி கதாபாத்திரத்தில் குறும்பட உலகில் வலம்வரும் அபிராமி ஐயர், இரும்புத்திரை படத்தில் வங்கி லோன் கொடுத்து ஏமாற்றும் பேர்வழியாக நடித்த அப்துல் செளகத் அலி கணவர் கதாபாத்திரத்திலும் மிகையற்ற நடிப்பை வழங்கியிருக்கின்றனர். மாமியார் கதாபாத்திரத்தில் கவண் படத்தில் பவானி கதாபாத்திரத்தில் நடித்த பிரியதர்ஷினி ராஜ்குமார் நடித்திருக்கிறார்.

பொதுவாக இந்தச் சமூகத்தில் குழந்தப்பேறு இல்லாமல் போனால், பெண்ணையே குறை கூறும் போக்கும், அவர்களை வேறு பெயர்களில் அழைத்து மனதை கஷ்டப்படுத்தும் நபர்களும் இன்னும் இருந்துதான் வருகிறார்கள். அப்படிப்பட்ட நபர்களை நோக்கியும், தங்களுக்கு பிரச்னை இருக்கிறது என்பதை வெளிப்படையாக ஆண் ஏன் சொல்லக் கூடாது என்றும் இந்தப் படம் கேள்வி எழுப்புகிறது.

படத்தின் இயக்குநர் ஜானுடன் பேசியபோது, 'இந்தப் படத்தை உருவாக்க தயாரிப்பாளர் நவீன் மாதவன் உறுதுணையாக இருந்தார். அவர் இல்லையென்றால் இந்தப் படம் கிடையாது. எனது குழுவினரும் மிகச் சிறப்பான பங்களிப்பை அளித்தனர். அனைவருக்கு நன்றி. சில விளம்பரப் படங்களில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்திருக்கிறேன். வெள்ளித்திரையில் களம் காண கதையை உருவாக்கி வருகிறேன்’என்றார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com