இயக்குநர் மணிரத்னம் படத்தில் நடிப்பது என்பது எல்லா நடிகர்களின் கனவாக இருக்கும். இந்நிலையில் செக்கச் சிவந்த வானம் படத்தில் விஜய் சேதுபதிக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. அதனை நன்றாக பயன்படுத்திய அவர், பெரும் நட்சத்திரப் பட்டாளத்துக்கிடையே தனது பங்களிப்பைச் சிறப்பாகச் செய்து பரவலான பாராட்டைப் பெற்றார். எல்லா தரப்பு ரசிகர்களிடையே படம் வரவேற்பை பெற்றது.
இயக்குநர் மணிரத்னம் தன்னுடைய நீண்ட நாள் கனவுப் படமான கல்கியின் 'பொன்னியின் செல்வன்' புதினத்தை திரைப்படமாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். இதற்கான திரைக்கதையை அண்மையில் எழுதி முடித்தார். மிகப் பெரிய பட்ஜெட்டில் இந்தப் படத்தை உருவாக்க நினைத்த மணிரத்னம், முதலில் விஜய், விக்ரம், ஜெயம் ரவி, சிம்பு, மகேஷ் பாபு உள்ளிட்ட பெரிய நட்சத்திரங்களை நடிக்க வைத்து, நான்கு மொழிகளில் இப்படத்தை தயாரிக்க முடிவு செய்திருந்தார். ஆனால் தற்போது பட்ஜெட் பிரச்னைகளால் அது கைவிடப்பட்டது.
இந்நிலையில் தற்போது இப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கும் நிலையில், படம் பற்றிய மேலதிகத் தகவல்களை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவிக்க உள்ளனர்.