செய்திகள்

காவலர்களின் அவமதிப்புச் செயலுக்கு இயக்குநர் ரமணாவிடம் வருத்தம் தெரிவித்த காவல் அதிகாரிகள்!

28th Aug 2019 12:32 PM | எழில்

ADVERTISEMENT

 

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தன்னைக் காவலர்கள் அவமதித்த விதம் குறித்து இயக்குநர் ரமணா ஃபேஸ்புக்கில் எழுதியதைத் தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் அவரிடம் நேரில் வந்து விசாரணை நடத்தி வருத்தம் தெரிவித்துள்ளார்கள்.

தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள இயக்குநர் ரமணா - திருமலை, சுள்ளான், ஆதி ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில் சில நாள்களுக்கு முன்பு காரில் குடும்பத்தினருடன் தான் வந்துகொண்டிந்தபோது போக்குவரத்துக் காவலர்கள் தன்னை அவமரியாதை செய்ததாக  ஃபேஸ்புக்கில் பதிவு எழுதினார். இந்தப் பதிவை ஆயிரத்துக்கும் அதிகமானோர் பகிர்ந்ததால் இந்தச் செய்தி கவனம் பெற்றது.

இந்நிலையில் இயக்குநர் ரமணா ஃபேஸ்புக்கில் மற்றொரு பதிவு எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

ADVERTISEMENT

நெஞ்சார்ந்த நன்றிகள்...

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற சொல்லாடலுக்கான பொருளை செயலில் காண்பித்து, நேற்று எனக்கு நேர்ந்த ஒரு கசப்பான சம்பவத்திற்கு, என் முகநூல் பதிவிற்கு, என் உணர்விற்கு மதிப்பளித்து என் பதிவைப் பகிர்ந்த அத்தனை நல் உள்ளங்களுக்கும் அத்தனை முகநூல் நண்பர்களுக்கும் பத்திரிக்கை மற்றும் ஊடகத்தினருக்கும் எனக்கு ஆறுதலும் துணையும் நின்ற என் நண்பர்கள் அனைவருக்கும் சிரம் தாழ்ந்த நன்றிகள். அதன் பலனாக, இன்று முன்னணித் தமிழ் தொலைக்காட்சிச் செய்திகளிலும் இணையத்தளத்திலும் பல ஊடக நிறுவனங்கள் எனக்கு நேர்ந்த நிகழ்வை என்னை நேர்காணல் செய்து ஒளிபரப்புசெய்தன. அதன் விளைவாக,

இன்று காலை காவல்துறை உயர் அதிகாரிகள் கிருஷ்ணமூர்த்தி (Asst. Commr of police/Traffic investigation/ East range), கே. ஷோபனா (Inspector of police/Adayar-Mylapore/Traffic investigation wing/East range) இருவரும் எந்தன் வீட்டுக்கு வந்து மிகுந்த அக்கறையும் பொறுப்புடனும் நடந்த சம்பவத்தை விசாரித்து நடந்தவற்றுக்கு வருத்தம் தெரிவித்தார்கள். மேலும், பெரோஸ் கான் அப்துல்லா (Deputy commissioner of police/East Dist. Traffic) என்னுடன் தொலைபேசியில் பேசி நடந்தவற்றைக் கேட்டறிந்தார்.

இந்த நேர்மையான காவல்துறையின் விசாரணை நிகழ உதவியாக இருந்த அத்தனை நண்பர்களுக்கும் ஊடகம், மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் என்று எழுதியுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT