இந்த வருடப் பொங்கலுக்கு பேட்ட, விஸ்வாசம் என இரு பெரிய படங்கள் வெளியாகி, இரண்டும் வசூலை அள்ளியதால் தீபாவளிக்கும் இதே நிலைமை தொடரவுள்ளது. அந்தச் சமயத்தில் பெரிய நடிகர்கள் நடித்த பல படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜா ராணி, தெறி, மெர்சல் ஆகிய படங்களை இயக்கியுள்ள பிரபல இயக்குநர் அட்லி அடுத்ததாக விஜய் கதாநாயகனாக நடிக்கும் பிகில் படத்தை இயக்கி வருகிறார். மெர்சல் படத்துக்குப் பிறகு விஜய் - அட்லி - ஏ.ஆர். ரஹ்மான் இணையும் புதிய படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை ஏஜிஎஸ் நிறுவனம் கடந்த வருடம் இறுதியில் வெளியிட்டது. நயன்தாரா, ஜாக்கி ஷெராப், விவேக், யோகிபாபு, கதிர் போன்றோர் இப்படத்தில் நடிக்கிறார்கள். இசை - ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவு - ஜி.கே. விஷ்ணு, பாடல்கள் - விவேக், படத்தொகுப்பு - ரூபன் எல். ஆண்டனி, கலை - முத்துராஜ், சண்டைப் பயிற்சி - அனல் அரசு. ஜனவரி 19 அன்று பூஜை நடைபெற்றது. 2019 தீபாவளிக்கு வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிகில் படத்துடன் போட்டியிட இன்றைய தேதியில் குறைந்த மூன்று படங்களாவது போட்டியில் உள்ளன.
தனுஷ் நடிக்கும் பட்டாஸ், கார்த்தி நடிக்கும் கைதி, விஷால் நடிக்கும் ஆக்ஷன் என இந்த மூன்று படங்களும் தீபாவளிக்கு வெளியாகும் எனத் தெரிகிறது. பொங்கலுக்கு வெளியான இரு படங்களுமே வசூலில் குறை வைக்காததால் இனி பெரிய நடிகர்களின் படங்கள் எத்தனை வந்தாலும் சவாலை சமாளிக்கமுடியும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. தீபாவளிக்கு பிகில் உள்ளிட்ட நான்குப் படங்களுமே வெளிவர வாய்ப்பில்லையென்றால் குறைந்தபட்சம் மூன்று படங்களாவது வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.