விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 சமீபத்தில் தொடங்கியுள்ளது. விஜய் டி.வி.யில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே பரவலான வரவேற்பு உண்டு. தொலைத் தொடர்பு, இணையம், தொலைக்காட்சி என எந்தத் தகவல் தொடர்பு சாதனங்களும் இல்லாமல் 100 நாள்கள் இருப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் போட்டி விதி. கடந்த இரண்டு ஆண்டுகளாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், இந்த முறையும் தொகுத்து வழங்கி வருகிறார். பிக் பாஸ் முதல் சீஸனை நடிகர் ஆரவ்வும் கடந்த வருட போட்டியை நடிகை ரித்விகாவும் வென்றார்கள். சமூகவலைத்தளங்களில் பிக் பாஸ் குறித்த விவாதங்கள் அதிகமாக இடம்பெறுவதால் இதில் இடம்பெற்ற போட்டியாளர்கள் அதிகக் கவனம் பெற்று புகழை அடைந்துள்ளார்கள்.
கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார் நடிகை சாக்ஷி அகர்வால். சினிமா எக்ஸ்பிரஸ் இணைய இதழுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து அபிராமி வெளியேறிய பிறகும் எங்களால் நல்ல நண்பர்களாக இருக்கமுடியும். ஆனால் அவரை என்னால் இன்னும் புரிந்துகொள்ளமுடியவில்லை. என்னுடனும் ஷெரினுடனும் நெருங்கிய நண்பராக இருந்தார், மதுமிதாவிடமும் சிறந்த நண்பர்களாக இருந்தார், முகெனுக்காக என்னுடனான நட்பை முறித்துக்கொண்டார், பிறகு நான் வெளியேறியபோது அழுதார்... இவற்றில் அவருடைய எந்தப் பக்கம் உண்மையானது என என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை. எல்லாமுமா அல்லது எதுவும் இல்லையா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.