ராஜா ராணி, தெறி, மெர்சல் ஆகிய படங்களை இயக்கியுள்ள பிரபல இயக்குநர் அட்லி அடுத்ததாக விஜய் கதாநாயகனாக நடிக்கும் பிகில் படத்தை இயக்கி வருகிறார். மெர்சல் படத்துக்குப் பிறகு விஜய் - அட்லி - ஏ.ஆர். ரஹ்மான் இணையும் புதிய படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை ஏஜிஎஸ் நிறுவனம் கடந்த வருடம் இறுதியில் வெளியிட்டது. நயன்தாரா, ஜாக்கி ஷெராப், விவேக், யோகிபாபு, கதிர் போன்றோர் இப்படத்தில் நடிக்கிறார்கள். இசை - ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவு - ஜி.கே. விஷ்ணு, பாடல்கள் - விவேக், படத்தொகுப்பு - ரூபன் எல். ஆண்டனி, கலை - முத்துராஜ், சண்டைப் பயிற்சி - அனல் அரசு. ஜனவரி 19 அன்று பூஜை நடைபெற்றது. 2019 தீபாவளிக்கு வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிகில் படப்பிடிப்பில் பணியாற்றிய 400 பேருக்குத் தங்க மோதிரத்தைப் பரிசளித்துள்ளார் விஜய். நேற்றுடன் விஜய் நடிக்கும் காட்சிகளுக்கான படப்பிடிப்பு முடிந்த நிலையில், இச்செயலை அவர் செய்துள்ளார். ஏஜிஎஸ் சினிமாஸின் அர்ச்சனா கல்பாத்தி இதை ட்விட்டரில் உறுதி செய்துள்ளார். மேலும் கால்பந்து வீராங்கனைகளாக நடித்தவர்களுக்கு விஜய்யும் அட்லியும் கையெழுத்திட்ட கால்பந்து ஒன்றும் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
படப்பிடிப்பு 90 சதவிகிதம் முடிந்துவிட்டது, டப்பிங் பணிகள் தொடங்கிவிட்டன என்றும் அர்ச்சனா கல்பாத்தி தகவல் கூறியுள்ளார்.