ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு இதுவரை அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வது, அந்த மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிப்பது என்ற முக்கியத்துவம் வாய்ந்த முடிவை மத்திய அரசு சில நாள்களுக்கு முன்பு எடுத்து, அதனை நடைமுறைப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து ஆஸ்திரேலிய வானொலி ஒன்றுக்கு நடிகர் விஜய் சேதுபதி பேசியதாவது:
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கியது ஜனநாயகத்துக்கு விரோதமானது. காஷ்மீர் விவகாரம் குறித்து பெரியார் அன்றைக்கே கருத்து கூறிவிட்டார். அடுத்தவர் வீட்டுப் பிரச்னையில் இன்னொருவர் தலையிடமுடியாது. அடுத்த வீட்டுப் பிரச்னையில் நாம் அக்கறை செலுத்தலாம், ஆளுமை செலுத்தக்கூடாது. காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது மன வருத்தம் தருகிறது என்று கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்ற சர்வதேசத் திரைப்பட விழாவில் சூப்பர் டீலக்ஸ் படத்துக்காக நடிகர் விஜய் சேதுபதிக்குச் சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது.