பழம்பெரும் ஹிந்தி நடிகர் திலீப் குமார் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
புகழ்பெற்றம் ஹிந்தி திரைப்பட நடிகர் திலீப் குமார் உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், மும்பையில் இன்று சிகிச்சை பலனின்றி (ஜூலை 7) காலமானார். அவருக்கு வயது 98.
அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்களும், திரையுலகினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
திலீப் குமார் மறைவு குறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் குறிப்பிட்டுள்ளதாவது, பல்வேறு தரப்பினரால் விரும்பப்பட்டவர் திலீப் குமார். இந்திய திரையுலகினரின் இதயத்தில் திலீப் குமார் என்றும் நிலைத்திருப்பார். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் என்று பதிவிட்டுள்ளார்.
திலீப் குமார் மறைவு குறித்து சுட்டுரையில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, சினிமாவில் பல சாதனைகளை படைத்த திலீப் குமார் மறைவு கலை உலகத்திற்கு பேரிழப்பு என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.
திலீப் குமாரின் பங்களிப்பு இந்திய சினிமாவின் அடுத்த தலைமுறையினருக்கும் நினைவில் இருக்கும் என்று ராகுல் காந்தி தனது இரங்கல் குறிப்பில் புகழாரம் சூட்டியுள்ளார்.
இவர்களைத் தொடர்ந்து ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.