வர்த்தகம்

பங்குச்சந்தையில் தொடர்ந்து எட்டாவது நாளாக எழுச்சி

3rd May 2023 04:41 AM |  நமது நிருபர்

ADVERTISEMENT

ஒருநாள் விடுமுறைக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை தொடங்கிய பங்குச்சந்தையில் தொடர்ந்து 8-ஆவது நாளாக எழுச்சி இருந்தது.
 இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் மேலும் 242 புள்ளிகள் உயர்ந்து நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 82.65 புள்ளிகள் (0.46 சதவீதம்) உயர்ந்து 18,147.65-இல் நிலைபெற்றது.
 உலகளாவிய சந்தை குறிப்புகள் கலவையாக இருந்தாலும், உள்நாட்டுச் சந்தை தொடர்ந்து 8-ஆவது நாளாக ஏற்றம் பெற்றது. ஐடி, மெட்டல், ரியால்ட்டி பங்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது.
 மேலும், அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகளை வாங்குவதில் கவனம் செலுத்தி வருவதும்,
 ஏப்ரலில் ஜிஎஸ்டி வசூல் சாதனை அளவை எட்டியுள்ளதும் சந்தைக்கு சாதகமாக அமைந்தது.
 குறிப்பாக சென்செக்ஸில் அதிக திறன் கொண்ட மார்க்கெட் லீடர் ரிலையன்ஸ், முன்னணி ஐடி நிறுவனம் இன்ஃபோசிஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளுக்கு கிடைத்த நல்ல வரவேற்பு சந்தை வலுப்பெற உதவியது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
 சந்தை மதிப்பு: இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு வர்த்தக முடிவில் ரூ.271.82 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ) கடந்த வெள்ளியன்று ரூ.3,304.32 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
 சென்செக்ஸ் தொடர்ந்து முன்னேற்றம்:
 சென்செக்ஸ் காலையில் 189.17 புள்ளிகள் கூடுதலுடன் 61,301.61-இல் தொடங்கி 61,255.00 வரை கீழே சென்றது. பின்னர், அதிகபட்சமாக 61,486.24 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 242.27 புள்ளிகள் (0.40 சதவீதம்) கூடுதலுடன் 61,354.71-இல் முடிவடைந்தது.
 சென்செக்ஸ் பட்டியலில் 14 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும், 16 பங்குகள் விலையுயர்ந்த பட்டியலிலும் இருந்தன. இதே போன்று, தேசிய பங்குச் சந்தையில் 1,255 பங்குகள் ஆதாயம் பெற்றன. 817 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. 50 முன்னணி நிறுவனப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி பட்டியலில் 29 பங்குகள் ஆதாயம் பெற்றன.
 21 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன.

ADVERTISEMENT
ADVERTISEMENT