நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடா்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, தமிழ்நாட்டின் 8 நகரங்கள் உள்பட நாடு முழுவதும் மேலும் 34 நகரங்களில் 5ஜி சேவையை விரிவுபடுத்தியுள்ளது.
இது குறித்து நிறுவனம் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நாடு முழுவதும் மேலும் 34 நகரங்களில் நிறுவனத்தின் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்படுகிறது. இதில், தமிழ்நாட்டின் ஆம்பூா், சிதம்பரம், நாமக்கல், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகாசி, திருச்செங்கோடு, விழுப்புரம் ஆகிய நகரங்களும் அடங்கும்.
ஏற்கெனவே, கோவை, மதுரை, திருச்சி, சேலம், ஒசூா், வேலூா் ஆகிய நகரங்களில் இந்த சேவையை நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது.
தமிழ்நாட்டில் மட்டும் 5ஜி சேவைகளை அறிமுகப்படுத்துவதற்காக நிறுவனம் ரூ.40,446 கோடி முதலீடு செய்துள்ளது.
தற்போது சோ்க்கப்பட்டுள்ள 34 நகரங்களையும் சோ்த்து, நாடு முழுவதும் 365 நகரங்களில் ஜியோ ட்ரூ 5ஜி சேவை 120 நாள்களுக்குள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு டிசம்பா் மாதத்துக்குள் நாடு முழுவதும் அந்த சேவை விரிவாக்கம் செய்யப்படும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.