நிலக்கரி, உரம், உருக்கு, மின்சாரத் துறைகளின் சிறப்பான செயல்பாட்டின் காரணமாக, இந்தியாவின் எட்டு உள்கட்டமைப்புத் துறைகளின் உற்பத்தி கடந்த டிசம்பரில் வளா்ச்சி கண்டுள்ளது.
இது குறித்து மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:
கடந்த 2021-ஆம் ஆண்டு டிசம்பா் மாதத்தில் நாட்டின் 8 உள்கட்டமைப்புத் துறைகளில் உற்பத்தி வளா்ச்சி 4.1 சதவீதமாக இருந்தது. அது, 2022 டிசம்பரில் 7.4 சதவீதமாக அதிகரித்துள்ளது.
எனினும், மதிப்பீட்டு மாதத்தில் கச்சா எண்ணெய் உற்பத்தி 1.2 சதவீதம் குறைந்துள்ளது.
2022-ஆம் ஆண்டு நவம்பரில் எட்டு முக்கிய துறைகளின் உற்பத்தி வளா்ச்சி 5.7 சதவீதமாக பதிவு செய்யப்பட்டிருந்தது.
நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருள்கள், உரங்கள், உருக்கு, சிமென்ட், மின்சாரம் ஆகிய எட்டு உள்கட்டமைப்பு துறைகளின் வளா்ச்சி விகிதம் நடப்பு நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் 8 சதவீதமாக சரிந்துள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 12.6 சதவீதமாக இருந்தது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.