இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச்சந்தை நேர்மறையாக முடிவடைந்தது.
இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 75 புள்ளிகள் உயர்ந்து நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 25.85 புள்ளிகள் (0.15 சதவீதம்) உயர்ந்து 17,769.25-இல் நிலைபெற்றது.
பலவீனமான உலகளாவிய உணர்வு காரணமாக வர்த்தகர்கள் எச்சரிக்கையாக இருந்தனர். ஆனால், முன்னணி நிறுவனங்களால் அறிவிக்கப்பட்ட சாதகமான காலாண்டு முடிவுகளுக்கு மத்தியில் மின்துறை, பயன்பாட்டுத் துறை நிறுவனப் பங்குகளுக்கு வரவேற்பு இருந்தது.
இருப்பினும், அந்நிய நிதி வெளியேற்றம் லாபத்தை ஒரு வரம்புக்குள் உள்படுத்தியது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு உயர்வு: இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு ரூ.71 ஆயிரம் கோடி உயர்ந்து வர்த்தக முடிவில் ரூ.267.03 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ) கடந்த திங்களன்று ரூ.412.27 கோடி அளவுக்கு பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
சென்செக்ஸ் 2-ஆவது நாளாக முன்னேற்றம்: சென்செக்ஸ் காலையில் 146.67 புள்ளிகள் கூடுதலுடன் 60,202.77-இல் தொடங்கி 59,967.02 வரை கீழே சென்றது. பின்னர், பிற்பகல் வர்த்தகத்தின் போது அதிகபட்சமாக 60,268.67 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 74.61 புள்ளிகள் (0.12 சதவீதம்) உயர்ந்து 60,130.71-இல் முடிவடைந்தது.
சென்செக்ஸ் பட்டியலில் 13 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும், 17 பங்குகள் விலையுயர்ந்த பட்டியலிலும் இருந்தன.
இதே போன்று, தேசிய பங்குச் சந்தையில் 1,061 பங்குகள் ஆதாயம் பெற்றன. 948 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. 50 முன்னணி நிறுவனப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி பட்டியலில் 30 பங்குகள் ஆதாயம் பெற்றன. 20 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன.