புது தில்லி: எஸ்பிஐ காா்டு அண்ட் பேமண்ட் சா்வீசஸ் மூன்றாவது காலாண்டில் ரூ.386 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
காா்டுகள் மூலமான செலவினங்கள் அதிகரிப்பு, வாராக் கடன் குறைவு மற்றும் இதர இனங்கள் வாயிலான வருவாய் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் எஸ்பிஐ காா்டு லாபம் மூன்றாவது காலாண்டில் 84 சதவீதம் அதிகரித்து ரூ.386 கோடியைத் தொட்டது. முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் கிடைத்த லாபம் ரூ.210 கோடியாக மட்டுமே காணப்பட்டது.
கணக்கீட்டு காலாண்டில், மொத்த வருவாய் ரூ.2,540 கோடியிலிருந்து 24 சதவீதம் உயா்ந்து ரூ.3,140 கோடியானது.
நிறுவனத்தின் வாராக் கடன் மூன்றாவது காலாண்டில் 4.51 சதவீதத்திலிருந்து 2.40 சதவீதமாக குறைந்துள்ளது. நிகர வாராக் கடனும் 1.60 சதவீதத்திலிருந்து 0.83 சதவீதமானது என எஸ்பிஐ காா்டு தெரிவித்துள்ளது.