இந்தியாவில் டீசலுக்கான தேவை தொடா்ந்து 2-ஆவது மாதமாக குறைந்துள்ளது.
பல்வேறு மாநிலங்களில் மழை பரவலாக பெய்து வருவதால் வாகனப் போக்குவரத்து பொதுவாக குறைந்துள்ளது. மேலும், மழை நன்றாக பெய்துள்ளதால் விவசாயிகள் டீசல் மோட்டாா்களைப் பயன்படுத்துவதை நிறுத்தியுள்ளனா். இதுவே எரிபொருள் தேவை குறைவதற்கு காரணம் என்று கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பெட்ரோலுக்கான தேவை பெரிய அளவில் உயராமல் உள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது ஆகஸ்ட் 1 முதல் 15-ஆம் தேதி வரை டீசல் தேவை 11.2 சதவீதம் அளவுக்கு குறைந்துவிட்டது. ஜூலை மாதத்தில் டீசல் தேவை மட்டுமல்லாது பெட்ரோல் தேவையும் குறைவாக இருந்தது. அதே நேரத்தில் ஆகஸ்ட் மாதத்தில் பெட்ரோல் தேவை குறையவில்லை.
விமானப் போக்குவரத்துத் துறையில் உள்நாட்டு, வெளிநாட்டுப் பயணிகள் போக்குவரத்து கரோனாவுக்கு முந்தைய நிலையை எட்டிவிட்டது. எனவே, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது ஆகஸ்ட் முதல் பாதியில் விமான எரிபொருள் தேவை 42.2 சதவீதம் அதிகரித்துள்ளது.