வர்த்தகம்

மீண்டும் புதிய உச்சத்தில் பங்குச் சந்தை: சென்செக்ஸ் மேலும் 453 புள்ளிகள் முன்னேற்றம்

தினமணி

பங்குச் சந்தையில் தொடர்ந்து 5-ஆவது நாளாக புதன்கிழமையும் உற்சாகம் காணப்பட்டது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகியவை மீண்டும் புதிய உச்சத்தைப் பதிவு செய்தன. இறுதியில் சென்செக்ஸ் 453 புள்ளிகள் கூடுதலுடன் 60,737-இல் நிலைபெற்றது. சந்தை மூலதன மதிப்பு ரூ.3.49 லட்சம் கோடி உயர்ந்து ரூ.270.73 லட்சம் கோடியாக புதிய உச்சத்தை பதிவு செய்தது.
 உலகளாவிய சந்தைக் குறிப்புகள் நேர்மறையாக இருந்தன. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. இதைத் தொடர்ந்து சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய இரண்டு குறியீடுகளும் மீண்டும் புதிய உச்சத்தைப் பதிவு செய்துள்ளன. நிதித் துறை பங்குகள், மார்க்கெட் லீடர் ரிலையன்ஸ், முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனம் இன்ஃபோஸிஸ், நுகர்பொருள் உற்பத்தி நிறுவனம் ஐடிசி உள்ளிட்டவை வெகுவாக உயர்ந்தது சந்தைக்கு ஆதரவாக அமைந்தது. டாடா குழும பங்குகளுக்கு நல்ல வரவேற்பு காணப்பட்டது. குறிப்பாக டாடா மோட்டார்ஸ் பங்குகள் மீது முதலீட்டாளர்கள் அதிக கவனம் செலுத்தினர்.
 சந்தை மதிப்பு புதிய உச்சம்: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,476 நிறுவனப் பங்குகளில் 1,760 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,578 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 138 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 392 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 23 பங்குகள் குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன.
 மேலும், 399 நிறுவனப் பங்குகள் வெகுவாக உயர்ந்து உயர்ந்தபட்ச உறை நிலையையும், 247 பங்குகள் வெகுவாகக் குறைந்து, குறைந்தபட்ச உறை நிலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.3.49 லட்சம் கோடி உயர்ந்து ரூ.270.73 லட்சம் கோடியாக புதிய உச்சம் கண்டது. பதிவு பெற்றுள்ள முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 8,25,83,318-ஆக உயர்ந்தது.
 காளையின் ஆதிக்கம்: சென்செக்ஸ் காலையில் 335.6 புள்ளிகள் கூடுதலுடன் 60,619.91-இல் தொடங்கி, 60,452.29 வரை கீழே சென்றது. பின்னர், அதிகபட்சமாக 60,836.63 வரை உயர்ந்து புதிய உச்சத்தைப் பதிவு செய்தது. இறுதியில் 452.74 புள்ளிகள் (0.75 சதவீதம்) கூடுதலுடன் 60,737.05-இல் நிலைபெற்றது. நாள் முழுவதும் காளையின் ஆதிக்கம் இருந்தது. சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 22 பங்குகள் ஆதாயம் பெற்றன. 8 பங்குகள் மட்டுமே சரிவைச் சந்தித்தன.
 எம் அண்ட் எம் அபாரம்: எம் அண்ட் எம் 5.17 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக ஐடிசி, பவர் கிரிட், டெக்மஹிந்திராவும் ஏற்றம் பெற்றன. எல் அண்ட் டி, டாடா ஸ்டீல், டைட்டன், சன்பார்மா, இன்ஃபோஸிஸ் ஆகியவை 1.50 முதல் 2.40 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன. மேலும், ரிலையன்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், கோட்டக் பேங்க், எச்டிஎஃப்சி பேங்க், ஹெச்சிஎல் டெக் உள்ளிட்டவையும் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன.
 மாருதி சுஸுகி கடும் சரிவு: அதே சமயம், முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி 2.71 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், ஹிந்துஸ்தான் யுனிலீவர், நெஸ்லே, ஆக்ஸிஸ் பேங்க், எஸ்பிஐ, பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் ஃபின் சர்வ், ஏஷியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்டவையும் சரிவைச் சந்தித்தன.
 நிஃப்டி 170 புள்ளிகள் ஏற்றம்: தேசிய பங்குச் சந்தையில் 934 பங்குகள் ஆதாயம் பெற்றன. 883 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி குறியீடு அதிகபட்சமாக 18,197.80 வரை உயர்ந்து புதிய உச்சத்தைப் பதிவு செய்தது. காலையில் 18,097.85-இல் தொடங்கிய நிஃப்டி, பின்னர் 17,991.95 வரை கீழே சென்றது. இறுதியில்,169.80 புள்ளிகள் (0.94 சதவீதம்) கூடுதலுடன் 18,161.75-இல் நிலைபெற்றது.
 நிஃப்டி ரியால்ட்டி குறியீடு தவிர ஏனைய துறை குறியீடுகள் அனைத்தும் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. இதில் நிஃப்டி ஆட்டோ குறியீடு 3.43 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. ஐடி, மெட்டல், எஃப்எம்சிஜி, பிஎஸ்யு பேங்க் குறியீடுகள் 0.80-1.50 சதவீதம் வரை உயர்ந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒசூா் அருகே பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி வேட்பாளா் மீது தாக்குதல்

ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளியில் மழலையா் பட்டமளிப்பு விழா

ஒசூரில் கந்து வட்டி வசூலித்த தனியாா் நிறுவன அதிகாரி கைது

கிருஷ்ணகிரி காங்கிரஸ் வேட்பாளா் கே.கோபிநாத் மீது வழக்குப் பதிவு

8 லட்சம் வாக்குகள் பெற இலக்கு: பாஜக வேட்பாளா் பேச்சு

SCROLL FOR NEXT