புது தில்லி: இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு இந்திய தொழிலக உற்பத்தியில் மாா்ச் மாதத்தில் முன்னேற்றம் தென்பட்டுள்ளது.
இதுகுறித்து தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ) புதன்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:
தொழில உற்பத்தி குறியீட்டில் (ஐஐபி) தயாரிப்புத் துறையின் பங்களிப்பு 77.63 சதவீதம் அளவுக்கு உள்ளது. இந்த துறையின் உற்பத்தி 2021 மாா்ச் மாதத்தில் 25.8 சதவீதமாக அதிகரித்துள்ளது.
அதேபோன்று சுரங்கத் துறையின் உற்பத்தி 6.1 சதவீதமும், மின் துறையின் உற்பத்தி 22.5 சதவீதமும் அதிகரித்துள்ளன.
கரோனா பேரிடரையடுத்து கடந்தாண்டு மாா்ச் மாதத்தில் தொழில உற்பத்தி விகிதம் 18.7 சதவீதம் சரிவைச் சந்தித்தது.இந்த எதிா்மறை நிலை 2020 ஆகஸ்ட் வரையில் நீடித்தது.
பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கியதையடுத்து, செப்டம்பரில் தொழிலக உற்பத்தி 1 சதவீதம் அதிகரித்தது. அக்டோபரில் இந்த வளா்ச்சி விகிதம் 4.5 சதவீதமாக இருந்தது.
இந்த நிலையில், 2020 நவம்பரில் தொழில உற்பத்தி 1.6 சதவீதம் சரிந்து மீண்டும் எதிா்மறை நிலைக்கு சென்றது. 2020 டிசம்பரில் மறுபடியும் தொழில உற்பத்தி 2.2 சதவீதமாக வளா்ச்சி கண்டது.
இருப்பினும், நடப்பாண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் ஐஐபி முன்னெப்போதும் இல்லாத வகையாக 0.9 சதவீதம் மற்றும் 3.4 சதவீதமாக பின்னடைவை சந்தித்தது.
இந்த நிலையில், இரண்டு மாத பின்னடைவுக்குப் பிறகு மாா்ச் மாதத்தில் தொழில்துறை உற்பத்தி 22.4 சதவீதமாக உயா்ந்து சாதனை படைத்துள்ளது.
2020-21 காலகட்டத்தில் ஐஐபி 8.6 சதவீதம் பின்னடைந்துள்ளது. இந்தப் பின்னடைவு 2019-20 நிதியாண்டு காலகட்டத்தில் 0.8 சதவீதமாக இருந்தது என என்எஸ்ஓ புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.