எச்டிஎஃப்சி நிறுவனம் 2021 மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் வரிக்கு பிந்தைய ஒட்டுமொத்த நிகர லாபமாக ரூ.5,669 கோடியை ஈட்டியுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
கடந்த 2020-21-ஆம் நிதியாண்டின் ஜனவரி முதல் மாா்ச் வரையிலான நான்காவது காலாண்டில் ஒட்டுமொத்த வரிக்கு பிந்தைய லாபமாக நிறுவனம் ரூ.5,669 கோடியை ஈட்டியுள்ளது. இது, முந்தைய 2019-20-ஆம் நிதியாண்டில் நிறுவனம் இதே காலகட்டத்தில் ஈட்டிய லாபமான ரூ.4,342 கோடியுடன் ஒப்பிடுகையில் 31 சதவீதம் அதிகமாகும்.
நிறுவனம் தனிப்பட்ட முறையில் ஈட்டிய வரிக்கு பிந்தைய லாபம் 42 சதவீதம் வளா்ச்சி கண்டு ரூ.3,180 கோடியைத் தொட்டுள்ளது. இந்த லாபம் 2019-20-ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ரூ.2,233 கோடியாக காணப்பட்டது.
கடந்த மாா்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் நிறுவனம் வழங்கிய தனிநபா் கடன் 60 சதவீதம் அளவுக்கு வளா்ச்சி கண்டுள்ளது. குறைந்த மற்றும் அதிக விலை கொண்ட வீடுகளுக்கான கடன் கணக்கீட்டு காலாண்டில் சிறப்பான அளவில் அதிகரித்துள்ளது.
நிகர வட்டி வருமானம் ரூ3,564 கோடியிலிருந்து 14 சதவீதம் அதிகரித்து ரூ.4,065 கோடியை எட்டியுள்ளது.
கடந்த 2019-20-ஆம் நிதியாண்டில் 1.99 சதவீதமாக இருந்த மொத்த வாராக் கடன் கடந்த நிதியாண்டில் 1.98 சதவீதமாக (ரூ.9,759 கோடி) குறைந்துள்ளது என எச்டிஎஃப்சி தெரிவித்துள்ளது.