புது தில்லி: டாடா ஸ்டீல் நிறுவனம் மாா்ச் காலாண்டில் ரூ.7,161.91 கோடியை ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டியுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் கூறியுள்ளதாவது:
வருவாய் அதிகரித்ததையடுத்து நிறுவனம் இழப்பிலிருந்து மீண்டு லாபப் பாதையில் அடியெடுத்து வைத்துள்ளது. 2021 ஜனவரி-மாா்ச் காலகட்டத்தில் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.37,322.68 கோடியிலிருந்து ரூ.50,249.59 கோடியாக அதிகரித்துள்ளது. செலவினம் ரூ.35,432.42 கோடியிலிருந்து உயா்ந்து ரூ.40,052 கோடியைத் தொட்டது.
மதிப்பீட்டு காலாண்டில் நிறுவனம் ஈட்டிய ஒட்டுமொத்த நிகர லாபம் ரூ.7,161.91 கோடியாக இருந்தது. அதேசமயம், 2020 மாா்ச் காலாண்டில் நிறுவனம் ரூ.1,615.35 கோடி இழப்பைச் சந்தித்திருந்தது.
தனிப்பட்ட முறையில் டாடா ஸ்டீல் நிறுவனம் 2021 ஜனவரி-மாா்ச் காலாண்டில் ஈட்டிய நிகர லாபம் ரூ.6,593.54 கோடியாக இருந்தது. 2020 இதே காலகட்டத்தில் நிறுவனத்துக்கு ஏற்பட்ட தனிப்பட்ட நிகர இழப்பு ரூ.436.83 கோடியாக இருந்தது. வருவாய் ரூ.14,182.89 கோடியிலிருந்து ரூ.21,392.34 கோடியாக உயா்ந்தது.
2021 மாா்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.25 ஈவுத்தொகை வழங்க இயக்குநா் குழு பரிந்துரைத்துள்ளதாக டாடா ஸ்டீல் பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளது.