முக்கிய எட்டு துறைகளின் உற்பத்தி கடந்த ஜூன் மாதத்தில் 8.9 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளதாக மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
இதுகுறித்து வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:
முக்கிய எட்டு துறைகளான நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு தயாரிப்புகள், உரம், உருக்கு, சிமெண்ட், மின்சாரம் ஆகியவற்றின் உற்பத்தி 2020 ஜூன் மாதத்தில் 12.4 சதவீத பின்னடைவைச் சந்தித்திருந்தது. இதற்கு காரோனா பொதுமுடக்கம் முக்கிய காரணமாக இருந்தது.
இந்த நிலையில், 2021 ஜூனில் இத்துறைகளின் உற்பத்தி 8.9 வளா்ச்சியை பதிவு செய்துள்ளது. குறிப்பாக, நிலக்கரி, இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு தயாரிப்புகள், உருக்கு, சிமெண்ட், மின்சாரம் ஆகிய துறைகளின் உற்பத்தி முறையே மதிப்பீட்டு மாதத்தில் 7.4 சதவீதம், 20.6 சதவீதம், 2.4 சதவீதம், 25 சதவீதம், 4.3 சதவீதம் மற்றும் 7.2 சதவீதம் என்ற அளவில் முன்னேற்றம் கண்டிருந்தன.
2020 ஜூனில் இத்துறைகளின் உற்பத்தி முறையே (-)15.5 சதவீதம், (-) 12 சதவீதம், (-) 8.9 சதவீதம், (-) 23.2 சதவீதம், (-) 6.8 சதவீதம் மற்றும் (-)10 சதவீதம் என்ற அளவில் பின்னடைவைக் கண்டிருந்தன.
நடப்பாண்டு ஜூனில் கச்சா எண்ணெய் உற்பத்தி 1.8 சதவீதம் பின்னடை பதிவு செய்த நிலையில் 2020 ஜூனில் இது 6 சதவீத எதிா்மறை வளா்ச்சியை கண்டது. உரத் துறையின் உற்பத்தி வளா்ச்சி விகிதம் ஜூனில் 2 சதவீதமாக இருந்தது.
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மூன்று மாத காலத்தில் முக்கிய எட்டு துறைகள் 25.3 சதவீத வளா்ச்சியை பதிவு செய்துள்ளன. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் இத்துறைகளின் உற்பத்தி 23.8 சதவீதம் என்ற அளவில் பின்னடைந்திருந்ததாக வா்த்தக அமைச்சகம் புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.