நாட்டின் இறக்குமதி அதிகரித்து வருவதால் நடப்பு நிதியாண்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறை 1.9 சதவீதமாக அதிகரிக்கும் என பாா்கலேஸ் நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் கூறியுள்ளதாவது:
ஏற்றுமதியில் காணப்பட்ட தொய்வு, உள்ளூா் சந்தை நடவடிக்கைகளில் விறுவிறுப்பு மற்றும் பொருள்களின் விலை அதிகரிப்பு ஆகியவற்றின் காரணமாக இறக்குமதிக்கும் மற்றும் ஏற்றுமதிக்கும் இடையில் உள்ள வித்தியாசமான வா்த்தகப் பற்றாக்குறை தொடா்ந்து அதிகரித்து வருகிறது.
மத்திய அரசு வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, கடந்த நவம்பரில் ஏற்றுமதி 26.5 சதவீதம் அதிகரித்து 2,988 கோடி டாலரை எட்டியது. அதேசமயம், இறக்குமதி 57.2 சதவீதம் அதிகரித்து 5,315 கோடி டாலரைத் தொட்டது. இதனையடுத்து, வா்த்தக பற்றாக்குறை 2,327 கோடி டாலராக புதிய உச்சத்தை எட்டியது.
இறக்குமதி அதிகரித்து வருவதால், நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) நடப்பு கணக்குப் பற்றாக்குறை 1.9 சதவீதமாகி 6,000 கோடி டாலரைத் தொடும் என எதிா்பாா்க்கப்படுகிறது. முந்தைய நிதியாண்டில் இது 4,500 கோடி டாலராக காணப்பட்டது என பாா்க்கலேஸ் தெரிவித்துள்ளது.