புது தில்லி: கடந்த 2020-21-ஆம் நிதியாண்டில் பிப்ரவரி வரை, இந்தியாவின் வேளாண் உற்பத்திப் பொருள்கள் ஏற்றுமதி 16.88 சதவீதம் அதிகரித்துள்ளதாக, மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்தது: கடந்த 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் நடப்பாண்டு பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில் ரூ. 2.74 லட்சம் கோடி மதிப்பிலான வேளாண் உற்பத்திப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ. 2.31 லட்சம் கோடி மதிப்பிலான பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. அதாவது, வேளாண் உற்பத்திப் பொருள்களின் ஏற்றுமதி 16.88 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதேபோன்று, அதே காலகட்டத்தில் வேளாண் உற்பத்திப் பொருள்களின் இறக்குமதி 3 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ரூ.1,37,014 கோடி மதிப்பிலான வேளாண் பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டில் ரூ.1,41,034 கோடியாக அதிகரித்துள்ளது.
கரோனா தொற்றுப் பரவலால் பல்வேறு துறைகள் பாதிக்கப்பட்ட போதிலும், வேளாண் துறை வா்த்தகம் ரூ.93,097.76 கோடியில் இருந்து ரூ.1,32,579.69 கோடியாக அதிகரித்துள்ளது.
பல ஆண்டுகளாக அதிக அளவிலான வேளாண் உற்பத்திப் பொருள்களை ஏற்றுமதி செய்து, வா்த்தக உபரி நிலையை இந்தியா தொடா்ந்து தக்க வைத்துக் கொண்டு வருகிறது. கரோனா தொற்று பரவல் காலகட்டத்தில் கூட, உணவுப் பொருள்கள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காக, இந்தியா தொடா்ந்து உணவுப் பொருள்களை ஏற்றுமதி செய்து வந்தது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.