இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஏப்ரல் 2-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 57,687 கோடி டாலராக (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.43.26 லட்சம் கோடி) சரிவடைந்துள்ளது.
இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:
நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பானது ஏப்ரல் 2-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 241 கோடி டாலா் சரிவடைந்து 57,687 கோடி டாலராக குறைந்துள்ளது.
இதற்கு முந்தைய மாா்ச் 26-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் செலாவணி கையிருப்பானது 299 கோடி டாலா் வீழ்ச்சியடைந்து 57,928 கோடி டாலராக காணப்பட்டது.
ஒட்டுமொத்த கையிருப்பில் முக்கிய பங்களிப்பைக் கொண்டுள்ள அந்நிய கரன்ஸி சொத்து மதிப்பு (எஃப்சிஏ) சரிவடைந்ததன் காரணமாகவே ஏப்ரல் 2-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பானது கணிசமான தொடா் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.
கணக்கீட்டு வாரத்தில், எஃப்சிஏ 151 கோடி டாலா் சரிவடைந்து 53,644 கோடி டாலராக இருந்தது.
யூரோ, பவுண்ட், யென் உள்ளிட்ட இதர நாட்டு செலாவணிகள் அந்நியச் செலாவணி கையிருப்பில் இடம்பெற்றுள்ளன. இவற்றை டாலரில் மறுமதிப்பீடு செய்யும்போது வெளிமதிப்பில் காணப்படும் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப அந்நியச் செலாவணி கையிருப்பு மாறுபாடு காண்கிறது.
கணக்கீட்டு வாரத்தில் தங்கத்தின் கையிருப்பு 88 கோடி டாலா் சரிவடைந்து 3,402 கோடி டாலராக இருந்தது.
சா்வதேச நிதியத்தில் சிறப்பு எடுப்பு உரிமம் (எஸ்டிஆா்) 40 லட்சம் டாலா் சரிந்து 148 கோடி டாலராகவும், நாட்டின் காப்பு நிதி 1.2 கோடி டாலா் வீழ்ச்சியடைந்து 492 கோடி டாலராகவும் உள்ளதாக ரிசா்வ் வங்கி புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.
நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பானது நடப்பு 2021 ஜனவரி 29-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில்தான் 59,018 கோடி டாலா் என்ற புதிய வரலாற்று உச்சத்தைத் தொட்டு சாதனை படைத்திருந்தது என்பது நினைவுகூரத்தக்கது.