புது தில்லி: லக்ஷ்மி விலாஸ் வங்கியை நிர்வகிக்க மூன்று தனிப்பட்ட இயக்குநர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட குழுவுக்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து லக்ஷ்மி விலாஸ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
லக்ஷ்மி விலாஸ் வங்கியின் அன்றாட விவகாரங்களை கவனிக்க அமைக்கப்பட்ட மூன்று தனிப்பட்ட இயக்குநர்களைக் கொண்ட குழுவுக்கு ரிசர்வ் வங்கி செப்டம்பர் 27 - ஆம் தேதியன்று ஒப்புதல் அளித்துள்ளது.
திருமதி மீட்டா மக்ஹான் இந்த குழுவின் தலைவராக செயல்படுவார். மேலும், சக்தி சின்ஹா மற்றும் சதீஷ் குமார் கல்ரா ஆகியோர் குழுவின் உறுப்பினர்களாக இருப்பர்.
இந்த இயக்குநர் குழு இடைக்காலத்தில் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியின் அதிகாரத்துடன் செயல்பட்டு வங்கியை வழிநடத்தும்.
நடப்பாண்டு செப்டம்பர் 27 நிலவரப்படி வங்கியின் பணப்புழக்க பாதுகாப்பு விகிதம் 262 சதவீதமாக உள்ளது. ரிசர்வ் வங்கி விதிமுறைப்படி இது குறைந்தபட்சம் 100 சதவீதம் இருந்தாலே போதுமானது. தற்போது இந்த சதவீதம் தேவையைவிட அதிகமாக இருப்பதன் காரணமாக வைப்புத் தொகை வைத்திருப்பவர்கள், கடன் பத்திரங்களில் முதலீடு செய்திருப்பவர்கள், வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் மற்றும் வங்கிக்கு கடன் வழங்குபவர்கள் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக லக்ஷ்மி விலாஸ் வங்கி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.