புது தில்லி: ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனத்தின் 1.28 சதவீதப் பங்குகளை அமெரிக்க நிறுவனமான கேகேஆா், ரூ.5,550 கோடிக்கு வாங்கியுள்ளது.
இது தொடா்பாக ரிலையன்ஸ் நிறுவனம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘ரிலையன்ஸின் துணை நிறுவனமான ரிலையன்ஸ் ரீடெயில் வெஞ்சா்ஸில் கேகேஆா் நிறுவனம் ரூ.5,550 கோடி முதலீடு செய்யவுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனமானது, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களுக்கான சிறப்பு அங்காடிகளையும், ஆடை, மின்னணுப் பொருள்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்யும் அங்காடிகளையும் நடத்தி வருகிறது. இணையவழி வா்த்தக நிறுவனமான ஜியோ மாா்ட்டையும் கட்டுப்படுத்தி வருகிறது.
நாடு முழுவதுமுள்ள சுமாா் 7,000 நகரங்களில் ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனம் சாா்பில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அங்காடிகள் செயல்பட்டு வருகின்றன.
ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனத்தில் முதலீடு செய்யும் இரண்டாவது நிறுவனம் கேகேஆா் ஆகும். இதற்கு முன் அமெரிக்க நிறுவனமான சில்வா் லேக், ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனத்தின் ரூ.7,500 கோடி மதிப்பிலான 1.75 சதவீதப் பங்குகளை வாங்குவதற்கு இந்த மாதத் தொடக்கத்தில் ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் மற்றொரு துணை நிறுவனமான ஜியோவில் கேகேஆா் நிறுவனம் ஏற்கெனவே ரூ.11,367 கோடியை முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.