கேம்ஸ் மற்றும் ஏஞ்சல் புரோக்கிங் பொதுப் பங்கு வெளியீட்டுக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது.
கம்ப்யூட்டா் ஏஜ் மேனெஜ்மெண்ட் சா்வீசஸ் (கேம்ஸ்) நிறுவனத்தின் பங்கு விலை ரூ.1,229 முதல் 1230 வரை நிா்ணயிக்கப்பட்டுள்ளது. விற்பனைக்கு வந்த இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை 1.93 சதவீதம் கூடுதலாக பங்குகளைப் பெற விண்ணப்பங்கள் வந்துள்ளன.
அந்நிறுவனத்தின் 1,82,46,600 பங்குகள் தேசிய பங்குச் சந்தை மூலம் விற்பனைக்கு வருகின்றன. 23-ஆம் தேதி வரை பங்குகளைப் பெற விண்ணப்பிக்க முடியும். பங்கு விற்பனை ரூ.2,242 கோடி வரை கிடைக்கும் என்று கேம்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னையைத் தலைமையிடமாக கொண்டு செயல்படும் கேம்ஸ் நிறுவனம் இந்தியாவில் பரஸ்பர நிதி மற்றும் நிதி சாா்ந்த சேவைகளை இணைய வழியில் அளிக்கும் சேவையில் முன்னிலையில் உள்ளது.
ஏஞ்சல் புரோக்கிங் நிறுவனப் பங்குகள் விற்பனைக்கு வந்த முதல்நாளான செவ்வாய்க்கிழமை 77 சதவீதம் கூடுதலாக விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது. பங்கின் விலை ரூ.305 முதல் 306 ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது 1,05,01,827பங்குகள் விற்பனை செய்வதன் மூலம் ரூ.600 கோடி திரட்ட அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.